ஐந்து ஆண்டுகள் ஆள முடியாது.. 356 கொக்கு காத்திருக்கிறது.. ஆளுநருக்காக திமுகவை சரமாரியாக தாக்கிய கிருஷ்ணசாமி!

Published : Jan 30, 2022, 07:10 PM IST
ஐந்து ஆண்டுகள் ஆள முடியாது.. 356 கொக்கு காத்திருக்கிறது.. ஆளுநருக்காக திமுகவை சரமாரியாக தாக்கிய கிருஷ்ணசாமி!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு அமலில் சட்டம் ஒன்று இருக்கின்ற பொழுது, மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினால் அந்த சட்டத்திற்கு ஒரு சல்லிக்காசு கூட மதிப்பில்லை என்பது தெரிந்திருந்தும், மீண்டும் மீண்டும் ஆளுநர் மீது பழியைப் போடவும்; ஆளுநர் மீது பாய்ந்து பிறாண்ட வேண்டியதற்குமான அவசியம் என்ன வந்தது?

உங்களுடைய தலைகளுக்கு மேலே '356’ என்ற கொக்கி இருக்கிறது என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். ஆளுநர் இந்திய அரசியல் சாசனத்தின் அதிகாரப்பூர்வ அதிபர். அவர்தான் 8 கோடி தமிழ் மக்களினுடைய பாதுகாவலர் என்று புதிய  தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சித்து திமுக கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யில் ‘கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் இன்று கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரை அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து கிருஷ்ணசாமி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், “இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்பின் அடிச்சுவடு கூட தெரியாமல் ’ஊருக்கு இளைத்தவன் பிள்ளையாருக்கு ஆண்டி’ என்பதைப்போல ஆளுநர்  பதவி அவ்வப்போது திமுகவுக்கு எளிதான இலக்காகி விடுகிறது. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும், இரண்டு-மூன்று முறை நன்கு பட்டபின்பும் கூட, இவர்களுக்கு புத்தி வந்தபாடில்லை. சட்ட வல்லுநர்களும் இவர்களுக்கு சரியாக வழி காட்டுவதாகத் தெரியவில்லை. பலமுறை சொன்னாலும் ஆட்சி போதையிலே இருப்பவர்களுக்கு அது ஏறுமா? என்பது சந்தேகமே!

பதவி ஆசைக்காக, கோடி கோடியாய் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலுக்கு முன்பாக இவர்கள் வண்டி வண்டியாக வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள். வாக்குறுதியைக் கொடுக்கின்ற பொழுது ”வெற்றிபெற்று, சட்டமன்றத்திற்குச் சென்ற பிறகு, தீர்மானம் நிறைவேற்றுவோம்; அந்த தீர்மானத்திற்கு ஆட்சி அதிகாரத்தின்   உச்சத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநர் உடனடியாக கையெழுத்துப் போட்டு விடுவார்; அதை உடனடியாக இவர்கள் சொன்ன உடனேயே தபால்காரரைப் போல இந்தியாவின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்; ஜனாதிபதி உடனடியாக முத்துவேல் கருணாநிதி மகன் உத்தரவு போட்டுவிட்டார், உடனடியாக முத்திரை போட்டு அனுப்பிவிடுங்கள் என்று உத்தரவு போட்டு விடுவார் என்று மக்களிடையே ஊர் ஊராக எடுத்துச் சொன்னார்களா? இப்படிச் சொல்லித்தான் வாக்கு வாங்கினார்களா? என்ன பைத்தியக்காரத் தனம்? என்ன ஆணவம் இது?

திமுககாரர்கள் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்ன நல்ல பண்புகளை எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள்? இன்றைய தமிழக ஆளுநர் ரவி மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த ஆளுநரும் எவருடைய எடுபிடியாகவும் இருக்க மாட்டார்கள்; இருந்த வரலாறும் கிடையாது. இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தை ’திராவிட அறிவுஜீவீகள்’ கொஞ்சமாவது படித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் இந்திய மாநிலங்களின் ஆளுநருக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஒரு அவசர நிலை பிரகடனத்தை அறிவிப்பது என்றாலும் கூட மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தால் மட்டுமே ஜனாதிபதியால் அவசர நிலை பிரகடனத்தை அமலாக்க முடியும்.  ஆனால், ஒரு மாநில அரசைக் கலைப்பதற்கு அந்த மாநில அரசின் ஒப்புதல் ஆளுநருக்கு தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறது; தமிழக சட்டப்பேரவை இந்திய அரசியல் சாசனத்தின் பிரதான கோட்பாடுகளிலிருந்து விலகிப் பிரிவினை எண்ணத்தை விதைத்து வருகிறது போன்ற வலுவான சில ஆதாரங்களை முன் வைத்தாலே இந்த ஆட்சி கலைக்கப்பட்டு விடலாம். திமுக தனது மிதமிஞ்சிய ஆணவத்தால் தங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது.  மத்திய அரசு அதற்குண்டான எந்த முனைப்பையும் காட்டாவிட்டாலும் கூட, இல்லை இல்லை எங்களால் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆள முடியாது. எங்கள் முன் யார் இருக்கிறார்களோ? அவர்களுடன் முட்டி மோதி எங்கள் மண்டையை நாங்களாகவே உடைத்து கொள்வோம் என்று அவர்கள் தீர்க்கமாக இருப்பதாகவே தெரிகிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய அனைத்து தீர்மானங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த சட்டத்திலும் வரையறை செய்யப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை எத்தனையோ சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்த சட்டங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகளில் கூட இருக்கிறதா என்றால் கூட பதில் சொல்ல முடியாது. இந்திய அரசியல் சாசனத்தின் அங்கம்தான் மாநில அரசு. இந்த மாநிலத்தை பரிபாலனம் செய்யக்கூடியவர் ஆளுநர் அவர்களே. இந்த மாநிலத்தை ஆளுவதற்கு உண்டான ஆலோசனை குழுவாக வேண்டுமென்றால் அமைச்சர்கள் இருப்பார்கள். எல்லாம் நியாயப்படியும், சட்டப்படியும், ஓரளவு தார்மீக அடிப்படையிலும் நடக்கின்ற வரையிலும் எந்த ஆளுநரும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவையின் செயல்பாட்டில் அதிகம் தலையிட மாட்டார். ஆளுநரின் அறிவுரையைக் கேட்டுதான் அமைச்சரவை செயல்பட வேண்டுமே தவிர, அமைச்சரவை ஆளுநருக்கு  உத்தரவிட முடியாது. ஆனால், ஆளுநர்கள் அமைச்சர்களுக்குக் கட்டளையிட முடியும். இவையே இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்கள்.

பன்வாரிலாலை ஏமாற்றி முதல் ஆளுநர் உரையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக ’இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் பிரிவினை எண்ணத்தோடு பாரத தேசத்தை ’ஒன்றிய அரசு’ என்று வேண்டிய அளவிற்குச் சிறுமைப்படுத்தி சட்டமன்றத்திலே பதிவு செய்யப்பட்டது. இந்தியத் தேசத்தின் வெற்றியைக் குறிக்கக்கூடிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை  நீக்கப்பட்டது. ஆனால், விழிப்போடு இருந்த இன்றைய ஆளுநர் உரையில் எங்கும் ’ஒன்றிய அரசு’ என்று பிரிவினைவாத வார்த்தை வராமல் பார்த்துக்கொண்டார். எப்படியாவது இந்த ஆட்சி காலகட்டத்திலேயே தமிழ் மொழியின், தமிழ் இனத்தின், தமிழ் மண்ணின் பெருமைகளை முற்றாக அழித்து, அதற்கு ’திராவிட சாயம்’ பூசி விட வேண்டும் என்ற திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் எண்ணம் நிறைவேறாமல் போனதால் ஆத்திரம் கொண்டு, இப்பொழுது ஆளுநர் மீது பாய்கிறார்கள்; பிறாண்டுகிறார்கள். ’முரசொலி’ பத்திரிக்கையில் தேவையில்லாமல் ஆளுநர் அவர்கள் மீது வைத்திருக்கக்கூடிய விமர்சனம் ஜனநாயக அத்துமீறல்; அராஜகம்; திமுகவின் அடாவடியாகும்.

இந்தியத் தேசிய மருத்துவ கழகமும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே ஒரு தேர்வு மூலம் தேர்வு செய்யும் ‘நீட் தேர்வு’ கொண்டு வரப்பட்டது. பின்தங்கிய மாநிலங்கள் என்று சொல்லக்கூடிய மாநிலங்கள்கூட நீட் தேர்வு முறையை ஏற்றுக் கொண்டு மாநில பாடத்திட்டங்களை மாற்றி மாணவர்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவெங்கும் எந்த பிரச்சினைகளும் இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்த திராவிட ஸ்டாக்கிஸ்டுகளும், அதனுடைய கொத்தடிமை கட்சிகளும் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்பதைப்போல நீட்டுக்கு எதிரான அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பதோடு, தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைத்துக்கொண்டு இப்போது ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஏற்கனவே, மத்திய அரசினுடைய சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு அமலில் இருக்கின்ற பொழுது, மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினால் அந்த சட்டத்திற்கு ஒரு சல்லிக்காசு கூட மதிப்பில்லை என்பது தெரிந்திருந்தும், மீண்டும் மீண்டும் ஆளுநர் மீது பழியைப் போடவும்; ஆளுநர் மீது பாய்ந்து பிறாண்ட வேண்டியதற்குமான அவசியம் என்ன வந்தது? இப்படி இவர்கள் சொல்லியதைக் கேட்கவில்லை என்றால் உள்துறை அமைச்சரிடத்திலே புகார் செய்வார்கள். ஆளுநரை ராஜினாமா செய்யச் சொல்லுவார்கள்; ஆளுநரை நீக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவர்களுக்கு இசைந்து போகவில்லை என்றால் அவர்களின் ஊதுகுழல் முரசொலியில் வசை பாடுகிறார்கள். ஆளுநர் அண்மையில் அவருடைய ஒரு உரையில் இரு கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அது அவரது உரிமை. அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நீட் தேர்வின் பயனை ஏற்கனவே தமிழக மாணவர்கள். மாணவர்கள் நுகர ஆரம்பித்துவிட்டார்கள். இருந்த ஒரு சில குறைபாடுகளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பங்கீட்டின் மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுவதில் என்ன தவறு?  இந்த முன்னேற்றங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல், தங்களால் செய்ய முடியவில்லையே, வேறு ஒருவர் செய்துவிட்டு பெயர் வாங்குகிறார்களே என்ற அந்த காழ்புணர்வே, இப்பொழுது ஒட்டுமொத்த நீட்டையும் காலி செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

ஆளுநர் என்ன வானத்திலிருந்தா குதித்து விட்டார் என்று கேட்கக்கூடியவர்களே, ஸ்டாலின் மட்டும் எந்த வானத்திலிருந்து குதித்து விட்டார்? ஆளுநர் அரசியல் சாசனத்தின் மிகப்பெரிய அங்கம். மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் அவரே தலைவர்; நீதிமன்றத்திற்கும் அவரே தலைவர். இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு மாநில அரசு நடைபெறுகிறதா என்று கண்காணிப்பது அவருடைய தலையாய கடமை. அந்த வகையில் ஆட்சிக் கட்டிலில் 5 ஆண்டு காலம் அமருவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டுமேயானால் சட்டத்தின்படி ஆட்சி செய்தால் மட்டுமே இந்த ஆட்சி நீடிக்கும். ஏதோ உதவாக்கரை பழமொழியைச் சொல்லிச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம். ”கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவ” இல்லை இல்லை, திமுககாரர்களே! அவர் உங்களை ’கொக்கு’ என்று நினைத்திருக்க மாட்டார். மீன் என்றே நினைத்து இருப்பார். ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்பதற்கு இணங்க மீன் வசமாக வாயில் மாட்டிக் கொள்ளும் வரை தேடியிருக்கும் கொக்கு ஆளுநர். உங்களுடைய தலைகளுக்கு மேலே '356’ என்ற கொக்கி இருக்கிறது என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். ஆளுநர் இந்திய அரசியல் சாசனத்தின் அதிகாரப்பூர்வ அதிபர். அவர்தான் 8 கோடி தமிழ் மக்களினுடைய பாதுகாவலர். 1976-ஆம் ஆண்டு இதே நாளில் நிகழ்ந்ததை எண்ணிச் செயல்படுங்கள்.! இல்லையேல், உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு விடும்!!
அனாவசியமாக ஆளுநரை விமர்சனம் செய்வதை விட்டு விடுங்கள்!!” என்று கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி