
இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் பொதுத்துறை உள்ளிட்ட உர உற்பத்தி நிறுவனங்கள் உரங்களின் விலைகளை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு விவசாயிகள் விரோத வேளாண் வணிக சட்டங்களை நிறைவேற்றி, விவசாய நிலங்களை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பறித்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் வாழ்வுரிமை பறிபோகும் விவசாயிகள் வாழ்வுரிமைக்காக நான்கு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். கார்ப்ரேட் ஆதரவு பாஜக மத்திய அரசு போராடும் விவசாயிகளை தேசவிரோதிகளாக சித்தரித்து, அவமதித்து வருகிறது.
அண்மையில் இந்திய உணவுக் கழகம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் உணவு தானியங்களுக்கான விலைத் தொகை ரொக்கமாக தருவதை நிறுத்தி, இனிமேல் வங்கிகளில் மட்டுமே செலுத்தப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரசாயன உரங்களின் விலைகளை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது. இனிமேல் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை முழுமையாக நிலத்திலிருந்து வெளியற்றும் வஞ்சக எண்ணத்துடன் உரங்களின் விலைகள் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த விவசாயிகள் விரோத உர விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசையும், உர உற்பத்தி நிறுவனங்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”. என்று அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.