
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பதவியில் இருக்கும் என்னிடம் நேரடியாக லஞ்சம் கேட்டு நெருக்கடி தருவதாக பெண் அதிகாரி டிவியில் தோன்றி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ சரோஜா. முன்னாள் எம்.பி. ஆக சரோஜா குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மீனாட்சியிடம் லஞ்சம் கேட்டதாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து அதிகாரி மீனாட்சி கூறியதாவது :
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு தன்னை மிரட்டுகிறார்.
நான் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளேன். இதற்கு முன்பு குழந்தைகள் நலன் குறித்து சமூக ஆர்வலராக இருந்து வந்தேன்.
அதனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஒப்பந்த அடிப்படையில் இந்த பதவி எனக்கு வழங்கப்பட்டது. இந்த பதவிக்கு நான் பணம் எதுவும் கொடுக்கவில்லை.
அதனால் அமைச்சர் சரோஜா தன்னை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளார். பணம் தராமல் வந்தவள் தானே என்று ஒருமையில் பேசினார். முன்னாள் முதலமைச்சரையும் ஒருமையில் திட்டினார்.
மேலும் நான் ஹெரனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வந்தேன். எனக்கு தையல் போடப்பட்டுள்ளதால் உடல்நிலை மோசமாக உள்ளது.
இந்த பதவிக்கு 30 லட்சம் ரூபாய் வரை தருவதற்கு ஆட்கள் தயாராக இருகிறார்கள் என என்னிடம் கூறினார்கள்.
நீயாக பணியைவிட்டு ஓடிவிடு என்றும் இல்லையென்றால் உன்னுடைய கேரக்டரை அசிங்கபடுத்துவேன் எனவும் என்னை அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும் என்னை மிரட்டுகிறார்கள்.
நீ வேலையை விட்டு ஓடும் வரை நான் உன்னை விட மாட்டேன் என்று கூறினார்கள்.
ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் பேசுவாரா என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
நான் வெளியே வந்து என்னுடன் வந்த அக்காள் மீது சாய்ந்து பயங்கரமாக அழுதேன்.
நான் உள்ளே சென்றது, வெளியே வந்து அழுதது என அனைத்தும் அங்கே உள்ளே சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும்.
அதை வைத்து விசாரணை நடத்த வேண்டும். போலீசிடம் புகார் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் எனது உடல் ஒத்துழைக்க வில்லை.
இதுகுறித்து மாவட்ட அமைச்சர் தங்கமணியிடம் பெட்டிசன் அளித்துள்ளேன். பெண்களுக்கான பாதுகாப்பு இங்கே இல்லை என்றே தோன்ற வைக்கிறது.
இதை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க வேண்டாம். சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும் கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அதிகாரி மீனாட்சி கூறினார்.