
நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். இவர் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தானாகவே நீதிபதி கர்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, மே 5ஆம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி டிஜிபிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பதிலுக்கு உத்தரவிட்டார்.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நீதிபதிகள் ஆஜராகவில்லை என்பதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜகதீஸ் சிங் கெஹர், தீபக் மிஸ்ரா, ஜலமேஷ்வர், ரஞ்சன் கோகை, மதன் பி.லோகூர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் உள்ளிட்ட 7 பேருக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சியுற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
நாடாளுமன்ற குழு மூலம் தான் நீதிபதிகளிடம் விசாரிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கர்ணனின் செயல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழ் உச்சநீதிமன்றம் செயல்படுகிறதா என கேள்வி எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.