மணல் கொள்ளைக்கு எதிராக பாஜக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்... அறிவித்தார் அண்ணாமலை!!

By Narendran SFirst Published Dec 8, 2022, 11:53 PM IST
Highlights

விரைவில் மணல் கொள்ளைக்கு தமிழக பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

விரைவில் மணல் கொள்ளைக்கு தமிழக பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல லட்சம் ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேர்ந்திருக்கும் ஆற்று மணலை, ஒரே நேரத்தில் கொள்ளையடிக்கும் மணல் கொள்ளை உச்சத்தை அடைந்திருக்கிறது. அரசு கணக்கில் 7 குவாரிகளாக இருந்ததை மேலும் பதினைந்து மணல் குவாரிகளை அனுமதித்து 22 ஆக உயர்த்த தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக ஆற்றுப்படுகையில் உள்ள ஒட்டு மொத்த விலைமதிப்பற்ற மணல் கொள்ளை போகிறது. தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகள், கணக்கிலே ஏழாக இருந்தாலும், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு, மணல் அள்ள உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. இனி இது அதிகரித்து, ஆயிரக்கணக்கான திமுகவினரின் நிறுவனங்கள் மணல் கொள்ளையில் ஈடுபடக்கூடும். தற்போது இரு சக்கர வாகனங்களில் கூட மணல் மூட்டைகளை அடுக்கிக் கொண்டு தினந்தோறும் மணல் திருட்டுக்கள் நடைபெறுகிறது. இது தவிர இரவெல்லாம் மணல் கொள்ளை நடைபெறுகிறது. வேலூர் முதல் சென்னைவரை மதிப்புமிக்க மணல்லாரிகளின் நெருக்கடியான ஊர்வலம் வெளிப்படையாக நடக்கிறது. ஆனால் காவல்துறை, மற்றும் அரசு அதிகாரிகள் கண்களில் இது ஏன் தெரியவில்லை என்பதை ஆளும் கட்சியின் அந்தந்தத் தொகுதி, பகுதி, வட்ட, மாவட்டச் செயலாளர்களைக் கேட்டால் தெரியும்.

இதையும் படிங்க: அண்ணாமலை இதை பிரதமர் மோடி கிட்ட கேளுங்க.. திமுகவை குறை சொல்லாதீங்க.! கொந்தளித்த கே.எஸ் அழகிரி

பத்து லோடுகள் மணல் எடுப்பதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள், குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான லோடுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, தற்போதைய சாராய அமைச்சர், தேர்தல் ரிசல்ட் அறிவித்த உடனேயே, திமுகவினர் தாராளமாக மணல் அள்ளலாம் என்று அறிவித்தார். யார் கேள்வி கேட்கிறார் என்று நான் பார்க்கிறேன் என்று சவால் விட்டு இருந்தார். அதை வெற்றிகரமாக தற்போது செய்து கொண்டிருக்கிறார். இயற்கை நமக்கு அளித்த கொடையை இப்படி வரைமுறை இல்லாமல் கொள்ளையடிப்பதால், வருங்கால சமுதாயம் குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட போகிறது. அருகில் உள்ள மாநிலங்களில் எல்லாம் ஆற்று மணலில் யாரும் கை வைப்பதே இல்லை. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஆற்று மணலை இயற்கை அன்னையின் வடிவாக நினைத்து, மணல் எடுக்க அனுமதிப்பதே இல்லை. கடல் மண், எம் சாண்ட், பாறை துகள்கள் போன்றவற்றைத் தான் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். அங்கெல்லாம் தமிழகத்தின் தரமான ஆற்றுமண்ணுக்கு அதிக விலை கிடைப்பதால், கட்டுப்பாடில்லாமல் மாபெரும் மணல் கடத்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்தார் நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ க.அன்பழகன்… அதிருப்தியில் அதிமுக!!

அரிதிலும் அரிதான இயற்கைச் செல்வமான மணலை, அழிப்பது மிகச் சுலபம். திரும்ப மணல் சேர்வதற்கு பல லட்சம் ஆண்டுகள் தேவைப்படலாம். இது பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல், திறனற்ற திமுக ஆட்சியில் இயற்கை அன்னையை துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அனுமதி கொடுக்காத நேர்மையான அதிகாரிகளும் மிரட்டப்படுகிறார்கள். நம் நாட்டின் இயற்கை செல்வத்தை, பேராசை கொண்ட அரசியல் வியாபாரிகளிடமிருந்து நாம்தான் மீட்க வேண்டும். இதற்காக ஒரு மணல் புரட்சி மக்களிடையே உருவாக வேண்டும். பல்லாயிரக்கணக்கான மணல் லாரிகளும் எந்திரங்களும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நினைப்பில் தமிழகத்தின் ஆற்றுப்படுகைகளை படுகுழிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சி இந்தக் கொள்ளைகளைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. விரைவில் மணல் கொள்ளைக்கு தமிழக பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் மக்கள் ஆதரவுடன் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!