யார் கலந்து கொள்ள வேண்டும்? கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அது அவரவர்களின் உரிமை என்ற போதிலும், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்களுடைய கருத்துகளை கட்சியின் கருத்தாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நடுநிலையோடு விவாதங்களை நடத்தி மக்களுக்கு பயனுள்ள தகவல்களை கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்களும், இடையீட்டாளர்களும், தங்களின் அரசியல் விருப்பு, வெறுப்புகளை சார்ந்து விவாதத்தை நடத்துவது முறையல்ல என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வலதுசாரி' என்ற அடைமொழியோடு தமிழக ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் கருத்துகள் பாஜகவினுடைய கருத்துகள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன. அவை பாஜகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல. உரிய நேரம் அளிக்காமல், பாஜகவுக்கு எதிரான நோக்கோடு நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற காரணங்களினால் தமிழக ஊடக விவாதங்களை பாஜகவினர் புறக்கணிக்கிற காரணத்தினால், ஒரு விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் இடம்பெறாமல் போய் விட்டால், தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் வலதுசாரி என்ற அடைமொழியோடு பலரை கலந்து கொள்ள வைக்கின்றன தமிழக ஊடகங்கள். இது ஊடக சுதந்திரம் ஆல், வர்த்தக சுதந்திரம் என்பதோடு, பாஜகவிற்கு எதிரான கருத்துகளை திணிக்கும் தந்திரம்.
யார் கலந்து கொள்ள வேண்டும்? கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அது அவரவர்களின் உரிமை என்ற போதிலும், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்களுடைய கருத்துகளை கட்சியின் கருத்தாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதே போல், அப்படி கலந்து கொள்பவர்களும் தங்களின் கருத்துகளை பாஜகவின் கருத்துகள் என்ற ரீதியில் பேசுவதும் ஏற்கதக்கதல்ல. சமீபத்தில் 'சோமட்டோ' விவகாரத்தை பல ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக திசை திருப்பி விட முயற்சி செய்தது வெளிப்படையாக தமிழக ஊடகங்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியது.
இது ஒரு விவாத பொருளே அல்ல. ஆனாலும், ஒரு தொலைக்காட்சியில் இது 'பொது புத்தியா' என்று ஒரு இடையீட்டாளர் கேட்டது வியப்பளித்தது. யாரோ எங்கோ எதையோ கூறியதை தலைப்பாக வைத்து பாஜக வோடு தொடர்புபடுத்தி விவாதம் செய்தது ஊடகங்களின் பாஜக வெறுப்பு போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தில் பாஜக எங்கிருந்து வந்தது? இதில் வேடிக்கை என்னவென்றால், வலதுசாரி என்ற அடைமொழியோடு கலந்து கொண்டவர்கள் தேவையில்லாமல் ஹிந்திக்கு முட்டு கொடுத்து பேசி களேபரத்தை உண்டாக்கியது தான்.
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பதை தெளிவுபடுத்தியதே பாஜக அரசு தான் என்ற நிலையில், பாஜக ஹிந்தியை திணிக்கிறது என்பது போன்ற மாயையை உருவாக்க ஊடகங்கள் முனைவதும், அவர்களின் தேவையற்ற கேள்விகளுக்கு தேவையில்லாமல் பதிலளிப்பதும் தேவையற்றது என்பதோடு பயனற்றதும் கூட.
நடுநிலையோடு விவாதங்களை நடத்தி மக்களுக்கு பயனுள்ள தகவல்களை கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்களும், இடையீட்டாளர்களும், தங்களின் அரசியல் விருப்பு, வெறுப்புகளை சார்ந்து விவாதத்தை நடத்துவது முறையல்ல. அதே போல், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் போது, அதை பாஜக வின் கருத்தாக வெளிப்படுத்துவதையும் தவிர்ப்பது நலம் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.