கதறும் உ.பிக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... இடஒதுக்கீடு விவகாரத்தில் எகிறி அடிக்கும் அண்ணாமலை!!

By Narendran SFirst Published Jan 8, 2022, 6:20 PM IST
Highlights

ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரத்தில் உழைப்பைத் திருட முயற்சித்துக் கதறும் உடன்பிறப்புகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரத்தில் உழைப்பைத் திருட முயற்சித்துக் கதறும் உடன்பிறப்புகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஓபிசி மக்களுக்கு வழங்குவதற்கான நிர்வாக முடிவினை உறுதிசெய்து உத்தரவிட்ட முதல் அரசு பாரதிய ஜனதா கட்சி அரசு தான். பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்வீட்டர் தளத்தில் எமது அரசில் மிக முக்கியமான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் தேசிய ஓதுக்கீட்டுத் திட்டத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, மருத்துவ/பல்மருத்துவ நுழைவுத்தேர்வில் நடப்பாண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என்று அறிவித்த போது சமூக நீதியில் ஒரு புதிய புரட்சி, ஒரு புதிய வரலாறு பாஜக ஆட்சியில் படைக்கப்பட்டது. மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பினை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 2015 ஆம் ஆண்டிலேயே தனது கொள்கை முடிவினை, பாரதிய ஜனதா கட்சி அரசு தெளிவாக இடம் எடுத்துரைத்து விட்டது. அதில் ஓபிசி அதற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தனக்கு தடையுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. தற்போது யார் யாரோ உறக்கம் கலைந்து வந்து தங்களால் தான் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. இந்திய நாட்டிற்கே நாங்கள் தான் முன்னோடி முன்மாதிரி, எல்லாம் பேசுவதைக் கேட்க வேடிக்கையாக உள்ளது. 2004-14ல் ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அப்போதே அவர்கள் இந்த ஒதுக்கீட்டைச் செய்திருக்கலாமே. அந்த அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகத்தானே திமுக அமைச்சர் இருந்தார். தன்கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்தபோது எதுவும் செய்யாமல், எதிர் கட்சிக்கு எந்த நல்ல பெயரும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் கதறும் நபர்களைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.  வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மத்திய அரசு தனது கொள்கை முடிவை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததால் இந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் கட்டமைத்த முழு பெருமையும் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே உண்டு.

மற்றவரெல்லாம் அடுத்த வீட்டு நெய் மணத்திற்கு ஆசைப்படும் அற்ப சிந்தனையாளர்களாகத்தான் கருதப்படுவர். உழைப்பைத் திருட முயற்சித்துக் கதறும் உடன்பிறப்புகளுக்கு ஒரு சில கேள்விகள் AIQ மருத்துவ இடங்களில் SC/ST களுக்கு இடஒதுக்கீடு கோரி 2007 ஆம் ஆண்டு அபய்நாத் வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தபோது, SC/ST களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக அப்போதைய காங்கிரஸ் மற்றும் திமுக  கூட்டணி அரசாங்கம் தெளிவாகத் தெரிவித்தது. OBCக்கான இடஒதுக்கீட்டிற்கான விருப்பமோ அல்லது அதை நிறைவேறும் முனைப்போ, அப்போது தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஓபிசி இடஒதுக்கீட்டிற்காக நீதிமன்றத்தை நாடுவது அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை.  ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக அபய்நாத் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நிலைப்பாட்டை மாற்றவோ மறுக்கவோ ஏன் அப்போதைய திமுக காங்கிரஸ் ஆட்சி தயாராக இல்லை.  இன்னம் சொல்லப்போனால் இந்திய தேசிய ஒதுக்கீடு. 1984 இல் OBC இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிகள் தொடங்கப்பட்டதிலிருந்து 2014 இல் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் வரை திமுக கூட்டணி அரசு. எந்த முன்முயற்சியும் அல்லது நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  ஆனால் நம்ம மோடி அவர்களின் அரசு, மத்திய நிறுவனங்களுக்கு இணையான AIQ மருத்துவ இடங்களில் OBC களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று நீதி மன்றத்தில் அரசு எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழி காட்டும், எந்தவொரு சட்டமும் இல்லாத நிலையில், இடஒதுக்கீடு சட்டப்படி உரிமைக்குரிய விஷயம் அல்ல என்றும், இது ஆட்சியில் உள்ள அரசின் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் கூடிய கொள்கை முடிவு என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதால், OBC களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கிய பெருமையை எவரும் கடன் வாங்க முடியாது. AIQ இல் OBCs இடஒதுக்கீட்டிற்காக மத்திய பாஜக அர்சு வழங்கிய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்த உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது என்பதை நீதிமன்றமே உணர்த்திய பின்னும், இன்று அது எந்த அடிப்படையில் பாஜக ஆட்சியில், பாஜகவின் உத்தரவிற்கு பிற கட்சிகள் சொந்தம் கொண்டாடுகிறது என்பதை விளக்கட்டும்? 4.1.2007 இல் UPA அரசாங்கம் மத்திய நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டிற்கான அரசு உத்தரவை மட்டும் இயற்றிவிட்டு இத்தனை ஆண்டுகாலம் அதை ஆட்சியில் இருந்தபோது அமல்படுத்தாமல், இப்போதுதான் உறக்கம் கலைகிறார்கள் அப்போதே உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அவர்களை யார் தடுத்தது? ஆகவே காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் செய்யத்தவறிய அல்லது செய்ய இயலாத, செயற்கரிய செய்த பெரியராக, நம்ம பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இந்த வரலாறுச் சாதனை  படைத்திருக்கிறார். அவரே உண்மையான சமூக நீதிக் காவலர் மேலும், OBCக்கான தேசிய இடஒதுக்கீட்டை 27%ஆக முன்மொழிந்த பாரதிய ஜனதா கட்சி அரசின் முடிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. உழைப்பைத் திருட முயற்சித்துக் கதறும் உடன்பிறப்புகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். 

click me!