பாஜகவின் மத வெறுப்பு பிரச்சாரம்... தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது... திருமாவளவன் வேண்டுகோள்..!

Published : Jan 23, 2022, 10:42 AM IST
பாஜகவின் மத வெறுப்பு பிரச்சாரம்... தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது... திருமாவளவன் வேண்டுகோள்..!

சுருக்கம்

தற்கொலைக்கு அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததுதான் காரணம் என்று பொய்யான செய்தியைப் பரப்பி அந்தப் பள்ளிக்கு எதிராக மட்டுமின்றி ஒட்டுமொத்த கிறித்தவ மதத்தினருக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

மாணவி லாவண்யாவின் சாவுக்குக் காரணம் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்தது தான் என்ற பொய்யானதொரு குற்றச்சாட்டைப் பரப்பி, பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியில்  அமைந்துள்ள தூய இருதயமேரி பள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவி லாவண்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாணவி லாவண்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் தமிழக அரசு,  தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின்மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், அம்மாணவியின்  குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மாணவி லாவண்யாவின் சாவுக்குக் காரணம் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்தது தான் என்ற பொய்யானதொரு குற்றச்சாட்டைப் பரப்பி, பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மாணவி லாவண்யாவிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட மரண வாக்குமூலத்தில் அவர் தான் பயிலும் பள்ளியின் ஆசிரியை ஒருவர் தொடர்ந்து தன்னைப் பள்ளியின் கணக்கு வழக்குகளைப் பார்க்கச் சொல்லி கூடுதலாக வேலை வாங்கியதாகவும்,
விடுமுறை நாட்களிலும் வீட்டுக்குப் போக விடாமல் விடுதியிலேயே இருக்க வைத்ததாகவும், தன்னைத் தொடர்ந்து திட்டியதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அங்கிருந்த நஞ்சை தான் அருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது தற்கொலைக்கு அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததுதான் காரணம் என்று பொய்யான செய்தியைப் பரப்பி அந்தப் பள்ளிக்கு எதிராக மட்டுமின்றி ஒட்டுமொத்த கிறித்தவ மதத்தினருக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் கிறித்தவ மதத்தினருக்கு எதிராக 486 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன எனவும் 2020 ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல்காளைவிட இது 75% அதிகம் எனவும் ' தி யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபோரம்' (The United Christian Forum ) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

’முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வோம்’ என வெளிப்படையாகப் பேசிவரும் சனாதன வெறியர்கள் இப்போது கிறித்தவர்களையும் குறிவைத்துத் தாக்க ஆரம்பித்துள்ளனர் என்பதன் அடையாளமே இது. இதைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைக் கெடுப்பதில் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு முதன்மையான பங்கு இருக்கிறது என்பதைப் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன. திமுக ஆட்சியின்கீழ் தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமை கொண்ட சனாதன சக்திகள் அதைக் கெடுப்பதற்கு இங்கும் அதே போல மதவாத வெறுப்புப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள சனாதன சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் உத்தரப் பிரதேசத்தைப் போல 'கும்பல் கொலைகள்'  நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி விடுவார்கள் என்பதை கவலையோடும் முன்னெச்சரிக்கையோடும் சுட்டிக்காட்டுகிறோம். இந்தியாவில் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 
இந்திய சட்ட ஆணையம் 2017ஆம் ஆண்டு சட்ட மசோதா ஒன்றைத் தயாரித்து இந்திய ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது. பாஜக அரசு அதை சட்டம் ஆக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தில் 153 சி மற்றும் 505 ஏ ஆகிய புதிய பிரிவுகளை சேர்ப்பதற்கான அந்த சட்டத் திருத்த மசோதாவைத் தமிழ்நாடு அரசே சட்டமாக்க முடியும். எனவே, எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி சட்டமாக்க வேண்டும் என்றும் அதன்மூலம் சனாதன சக்திகளின் வெறுப்பு அரசியல் பிரச்சாரத்தை முறியடித்துத் தமிழ்நாட்டைப் பாதுகாத்திட வேண்டுமெனவும்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!
ADMK Clash: மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?! ஓபிஎஸ் போல் ஓரங்கட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.!