
''கிறிஸ்துவ பள்ளிகள் தான் மாணவர்களுக்கு படிப்போடு, ஒழுக்கத்தையும் கற்றுத் தருகின்றன'' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ்., என்ற கிறிஸ்துவ தனியார் பள்ளியில் உணவு பாதுகாப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தற்போது தொற்றுகின்ற மற்றும் தொற்றா நோய்கள்தான், தமிழக அரசுக்கு பெரும் சவாலாக உள்ளன. இதற்கு பொதுமக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்தான் காரணமாக உள்ளன. நோய்கள் பரவாமல் இருப்பதற்கு, பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும். டெங்கு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு அவசியமாகிறது.
கிறிஸ்துவ பள்ளிகளில்தான், மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாமல், ஒழுக்கத்தையும் கற்று தருகின்றனர்” என்று பேசினார்.
இப்படி, ஒரு தனியார் கிறிஸ்துவ பள்ளியில் கலந்து கொண்டு, ஒரு மாநில அமைச்சர், கிறிஸ்துவ பள்ளிகள் மட்டுமே ஒழுக்கத்தை கற்றுத் தருகின்றன என்று பேசியது, பொதுமக்கள் மத்தியிலும், பள்ளிகள் நடத்தி வரும் இந்து, இஸ்லாமிய சமுதாயத்தினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாஜக., மாநிலச் செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில்,
மதமாற்ற வியாபாரம் தடைசெய்யப்படவேண்டும். மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் என்று கூறியுள்ள ஹெச்.ராஜா, தனதுபதிவில், திராவிட புரட்டுப் பூனை வெளியே: அண்ணாதுரை முதல்வர் ஆனவுடன் பள்ளிகளில் இருந்து நீதிபோதனை வகுப்புகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வெ.ரா கூட்டம் கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்று தருகின்றன என மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளனர். விஜயபாஸ்கரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. -என்று கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு: