
மழையில் நிற்க வைத்தபடியே பேட்டி கொடுத்த ஜெயா டிவியின் சிஇஓ விவேக்கின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியதாக செய்தியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் 1600 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சிஇஓவுமான விவேக்கை குறி வைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விவேக், எப்படி பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்? என்பது குறித்து
வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக தெரிகிறது.
ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனை நேற்று நிறைவடைந்ததை அடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விவேக் அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். வருமான வரித்துறை அதிகாரிகள், விவேக்கிடம் நீண்ட விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து விவேக் விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து செய்தியாளர்கள், விவேக்கின் வீட்டின் அருகில் காத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த விவேக், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வருமான வரித்துறை நடத்திய சோதனை குறித்தும், அதிகாரிகளின் விசாரணை குறித்தும் விளக்கமளித்தார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையில், உதவியாளர்கள் குடை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் பேட்டி அளித்தார். காம்பவுண்டுக்கு வெளியே நிற்கவைத்தபடியே அவர் பேட்டி அளித்தார். தான் என்ன பேச வேண்டும் என்பதை நினைத்ததை செய்தியாளர்களிடம் கூறிவிட்டு சென்று விட்டார்.
செய்தியாளர்களை வீட்டுக்குள் அனுமதித்தால், வீட்டை படம்பிடித்து விடுவார்கள் என்பதால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சோதனையின் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு பலமான உபசாரம் அளித்தது. ஆனால், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தெருவிலேயே நிறுத்தி விளக்கமளித்துள்ளார் விவேக். அவரின் இந்த நடவடிக்கை செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.