மக்களுக்காக வேலை செய்வதை விட பண ஆசை கொண்டவர்கள் பாஜகவில் அதிகம்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021க்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ், முன்னாள் எம்எல்ஏ பிரபீர் கோசல், பாஜகவை விமர்சித்துள்ளார்.
ஏன் பாஜகவில் வேலை செய்ய முடியாது..? என்ற தலைப்பில் பிரபீர் கோசல் எழுதியுள்ள கட்டுரையில், "மக்களுக்காக வேலை செய்வதை விட பண ஆசை கொண்டவர்கள் பாஜகவில் அதிகம்" என்று கூறியுள்ளார். பாஜகவில் வேலை செய்வது ஆபத்தானது’’ என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், ’’எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது,மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நான் பாஜகவில் இருந்தபோதும் என்னுடன் தொடர்பில் இருந்ததார். ஆனால் பாஜக தலைவர்கள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லை’எனத் தெரிவித்துள்ளார். பிரபீர் கோசலின் இந்தக் கட்டுரை ஹவுராவின் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக வெளியாக உள்ளது. அங்கு இவர் குக்கியமானவராக கருதப்படுகிறார்.
பிரபீர் கோசல் இந்த ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் உத்தரபாரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திரைப்பட நட்சத்திரமான காஞ்சன் முல்லிக்கிடம் தோல்வியடைந்தார். 2021 ஜனவரியில் தலைமையுடனான கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி கோசல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பா.ஜ.க.வின் நடத்தையை விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தாலும், அவர் இன்னும் பாஜகவில் இருந்து வருகிறார்.
பிரபீர் கோசல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவாரா என்று கேட்டபோது, ’’இந்த விஷயத்தில் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் தேர்தல்களின் போது பாஜகவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து எழுதியுள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.