ரஜினி ஆதரவு எனக்கு உண்டு... தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை... தூள் பறக்கவிடும் குஷ்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 18, 2021, 3:13 PM IST
Highlights

ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களுடன் ஓபன் ஜீப்பில் ஊர்வலமாக வந்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் ஏகபோக வரவேற்பு அளித்தனர். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகிய பணிகளை எல்லாம் முடித்துக் கொண்டு, தற்போது தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். அதிமுகவுடனான பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்புவிற்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். தனக்கு பாஜக தலைமை சேப்பாக்கம் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது என அத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே  மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது என வேகம் காட்டினார். பின் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.  

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கூட ‘‘பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை”. “வெற்றி கொடியை எட்டிப்பறிக்க போராடி வருகிறேன்” என பஞ்ச் டைலாக் எல்லாம் பேசி மாஸ் காட்டினார். இந்நிலையில் இன்று நடிகை குஷ்பு  ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களுடன் ஓபன் ஜீப்பில் ஊர்வலமாக வந்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் ஏகபோக வரவேற்பு அளித்தனர். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் குஷ்பு இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாஜக - அதிமுக அமைத்துள்ளது வெற்றிக்கூட்டணி. தேர்தல் களத்தில் உற்சாகமளிக்கும் அனைத்து கட்சியினர், நிர்வாகிகளுக்கு நன்றி. என் வாழ்க்கையே சவாலானது தான். இந்த தேர்தலில் சவாலை வென்று வருவேன். தோல்வி என்ற பேச்சுக்கே என் அகராதியில் இடமில்லை என பஞ்ச் டைலாக் பேசி தூள் கிளப்பினார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால், ஸ்டாலின் எதற்காக கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்றும், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எப்போதும் தனக்கு உண்டு என்றும் தெரிவித்தார். 
 

click me!