
பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிளவடைந்த போது ஒ.பி.எஸ் பின்னால் மத்திய அரசு செயல்படுவதாக பலரும் குற்றம் சாட்டினர். அதற்கு ஒ.பி.எஸ் தரப்பு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்தது.
ஆனால் தற்போது ஒ.பி.எஸ் அணி கொஞ்சம் கொஞ்சம் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிகிறது.
ஒ.பி.எஸ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் பா.ஜ.க அரசை ஒரு வார்த்தையேனும் புகழாமல் பேட்டியை முடிப்பதில்லை.
தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியின் செயல் வீரர்கள் வீராங்கனைகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் ஒ.பி.எஸ்.
அதன்படி இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தற்போது நடைபெற்று வரும் தமிழக அரசையும், திமுகவினரையும் கடுமையாக விமர்சித்தார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒ.பி.எஸ், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும், சசிகலா குடும்பத்தை முழுமையாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும், இதுதான் எங்கள் கோரிக்கை என தெரிவித்தார்.
மேலும், இன்னும் 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடர்வது ஆள்பவர்கள் கைகளில் தான் இருக்கிறது எனவும், பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.