பெட்ரோல், டீசல் விற்பனையில் கொள்ளை லாபம்... மோடி அரசுக்கு எதிராக வரிந்துகட்டும் விசிக, இடதுசாரிகள்.!

By Asianet TamilFirst Published Jun 27, 2021, 9:15 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இடதுசாரி கட்சிகள், விசிக ஆகியன 3 நாட்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 
 

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை தினந்தோறும் உயர்த்தப்படுகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சுயேட்சையாக விலைகளை நிர்ணயம் செய்கிறது என பாஜக அரசு பாசாங்கு காட்டி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய ஆரம்பகாலத்தில், அதனை தடுக்கும் நடவடிக்கையைத் தொடங்காமல், அரசியல் ஆதாயம் தேடிய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசு, அந்தக் கொடிய நோய்த்தொற்று பரவலைக் காரணமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப சுயநல வெறிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டியிருக்கிறது. இது மேலும் ரூ.125 வரை அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த கொள்கை அணுகுமுறையால் பெட்ரோல், டீசல் லிட்டர் முறையே ரூ.50 மற்றும் ரூ.40-க்கு விற்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாகி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் அலை உருவாகி மேலும் படுமோசமான சேதாரங்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பாக, குழந்தைகளை குறிவைத்து தாக்கும் எனவும், மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கிடையே கரும்பூஞ்சை, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா நோய்த்தொற்று அபாயம் அச்சுறுத்தி வருகிறது.
இந்த புதிய வகை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டும்தான் ஒரே வழி என கூறப்படுகிறது. ஆனால், நோய்த் தொற்று தாக்குதல் தொடங்கி 18 மாதங்கள் ஆகியும், பாஜக அரசு குடிமக்களுக்கு தடுப்பூசி மருத்து கொடுக்கவில்லை. கிடைக்கும் மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் விருப்பு, வெறுப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. முன் யோசனையும், போதிய முன்னேற்பாடுகளும் இல்லாமல் திடீரென நாடு முடக்கம் செய்யப்பட்டதில், நாட்டின் உற்பத்தி தடைபட்டது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கொன்றழிக்கப்பட்டன. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாடு எழுத்தில் வடிக்க இயலாத அவலம்.
இந்த நெருக்கடியான காலத்தில், மக்கள் துயரம் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் ஜூன் 16 முதல் இருவார கால நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து நாளை 28.06.2021 தொடங்கி 29, 30 தேதிகளில் மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.” என்று மூவரும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
 

click me!