
கோவையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்று வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளாக துடைப்பத்துடன் களம் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று பல்கலை பட்டமளிப்பு விழாவுக்காக கோவை வந்தார். அப்போது கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பன்வாரிலால் ஆய்வு செய்தார்.
பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனுடன் அதிரடியாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கோவையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்..
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டாவது நாளாக இன்றும் தனது அதிரடியை தொடர்ந்து வருகிறார். கோவை-காந்திநகர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை நேரில் ஆய்வு செய்தார்.
தூய்மை இந்தியா திட்டத்துக்காக கோவையில் துடைப்பத்துடன் கவர்னர் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.அவருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகளும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கோவை சவுரிப்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கேட்டறிந்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.