Jai Bhim : அய்யா மனசு வச்சு தம்பிய மன்னிச்சி விடுங்க.. சூர்யாவை மட்டம் தட்டும் தயாரிப்பாளர் கே. ராஜன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 20, 2021, 12:11 PM IST
Highlights

அந்த வரிசையில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சூர்யாவை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசிய அவர், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய மக்களின் அடையாள குறியான அக்னி கலசம் காலண்டர் வைக்கப்பட்டது மிகவும் தவறானது.

திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளத்தை குறிக்கும் அந்த கேலண்டரை வைத்தது மிகப்பெரிய தவறு என்றும், ஆனால் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பெருந்தன்மையோடு இதை மன்னித்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர் கே. ராஜன் வலியுறுத்தியுள்ளார். ஆனால் நடிகர் சூர்யாவின் இந்த செயல் வருத்தத்துக்குரியது, தமிழ் சினிமாவில் இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட அஞ்ச வேண்டும் என அவர் விமர்சித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி,  திராவிட இயக்கங்கள் சூர்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பாமகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என பாமக தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது இந்நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேர்த்தில் சிலர் சூர்யா அந்த குறிப்பிட்ட காட்சியை வைத்தது தவறு என்றும் கூறிவருகின்றனர்.

அந்த வரிசையில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சூர்யாவை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசிய அவர், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய மக்களின் அடையாள குறியான அக்னி கலசம் காலண்டர் வைக்கப்பட்டது மிகவும் தவறானது. இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் என்பது மற்றவர்களை காயப் படுத்துவதற்காக அல்ல, இந்த விவகாரத்தில் சூர்யா மீது எனக்கு வருத்தம் இருக்கிறது. முழு குற்றச்சாட்டையும் அவர் மீது கூறிவிடமுடியாது, அந்த படத்தின் இயக்குனர் இதற்கு காரணம், மருத்தவர் ராமதாஸ், பாமக என்பது அந்த மக்களுக்கான உரிமைகளுக்கு போராடுகிற கட்சி. அவருடன் நான் பழகியவன் என்பதிலிருந்தே நான் கூறுகிறேன், அவர் மிகவும் நல்ல மனம் படைத்தவர். அவர் விட்டுக் கொடுக்க கூடியவர், அதனால் இந்த விஷயத்திற்கு அவர்தான் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புகிறேன். இந்த தவறை பெரிதுபடுத்தாமல் அய்யா ராமதாஸ் மன்னிக்கவேண்டும்.

இந்த போராட்டம் ஒரு பாடம், இனிமேல் தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும், எந்த ஒரு தயாரிப்பாளரும் அடுத்தவர்கள் சமுதாயத்தையோ, மதத்தை இழிவுபடுத்தும் வகையில் படமெடுக்க அஞ்சுவார்கள் பாமக சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது சரிதான். இதில் தவறொன்றுமில்லை என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் சூர்யாவின் படத்தை இனி எந்த திரையரங்குகளிலும் வெளியிட கூடாது என பாமகவினர் கடிதம் எழுதுவது தவறு, அவரது திரைப் படத்திற்கு விருதுகள் வழங்க கூடாது என்று வலியுறுத்துவதும் தவறு, இது தமிழுக்கு செய்கின்ற துரோகம் என கே. ராஜன் கூறியுள்ளார். 
 

click me!