
செருப்பில் அத்திவரதர் படத்தை செருகி கடையில் மாட்டிய தி.க.வை சேர்ந்த கடைக்காரர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம் இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில், இந்து முன்னணியினரும், பா.ஜ.க,வைச் சேர்ந்தவர்களும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு கோவில் அருகில் அர்ச்சனைக்காக தேங்காய் கடை வைத்திருக்கும் பூபதி என்பவர், கடை வெளியில் ஒரு கட்டையில் செருப்பு மாட்டி, அதில் காஞ்சி அத்தி வரதர் புகைப்படத்தை வைத்திருந்தார். அதனைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைக்காரரிடம் சென்று, 'செருப்பில் சுவாமி படத்தை ஏன் வைத்துள்ளீர்கள்' எனக் கேட்டனர். அதற்கு பூபதி, ' இது என் கடை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் தி.க.,காரன். என்னைக் கேட்க நீங்கள் யார்' எனக்கேட்டுள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கடையை அடித்து நொறுக்கினர்.பாதுகாப்பிற்கு வந்த போலீசார், சண்டையை தடுத்து நிறுத்தி, கடை உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தி.க.காரர் எனக்கூறி அத்திவரதர் புகைப்படத்தை செருப்பில் செருகி கடையில் மாட்டி வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.