விஜய் சேதுபதி மீது நடத்தபட்ட தாக்குதல் மனிதாபிமானமற்றது.. அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2021, 12:28 PM IST
Highlights

இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகி விட்டனர். இது தொடர்பாக வேறு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என பெங்களூர் போலீசார் அதிரடியாக கூறியுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக விஜய்சேதுபதி தரப்பில் எந்த விதமான  விளக்கமோ, கருத்தோ இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

நடிகர் விஜய் சேதுபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி மீது ஒரு பொது இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்ததை போல தமிழ் சினிமாவுக்கு காலம் கடந்து வந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கனகச்சிதமாக இருக்கை போட்டு அமர்ந்தவர் யார் என்று கேட்டால் நடிகர் விஜய்சேதுபதி என்றே சொல்லலாம். குறிப்பாக அதிக பெண் ரசிகர்களைக் கொண்டவராகவும், குறுகிய காலத்தில் படு பிசியாக ஹீரோவாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. வில்லன்,  ஹீரோ,  துணை கேரக்டர் என எந்த  கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் தனக்கென தனி முத்திரையை பதித்து தமிழ்ச்சினிமாவில் கலக்கு கலக்கு என கலக்கி வருகிறார் அவர். 

ஒரே நேரத்தில் பல  படங்களில்  கமிட்டாகி அடுத்தடுத்து  படங்களை கொடுத்த வண்ணம் இருக்கிறார் அவர். அதேபோல பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் மாஸ்டர் செப் என்ற சமயல் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார், இந்நிலையில் பெங்களூருவில் நடந்த  படப்பிடிப்பில் ஒன்றில் கலந்துகொள்ள அவர் பெங்களூர் சென்றிருந்தார், அப்போது பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வெளியாகி உள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அதில், பெங்களூர் விமான நிலையத்தில்  நடிகர்  விஜய் சேதுபதி பாதுகாப்பு  புடைசூழ நடந்து செல்லும்போது பின்னால் இருந்து ஒருவர் ஓடிவந்து அவரை எட்டி உதைக்கும் காட்சியை பதிவாகி உள்ளது.

உடனே விஜய் சேதுபதியுடன் வந்த  சிலரும் பாதுகாப்பு படை வீரர்களும் அந்த நபரை பிடிக்க முயல்வது போன்ற பரபரப்பாக காட்சி அதில் உள்ளது. அந்த நபர் எட்டி உதைத்து அதில் சற்று நிலைதடுமாறும் விஜய்சேதுபதி சுதாரித்துக்கொண்டு தன்னைத் தாக்கிய நபரை நோக்கி செல்கிறார், அப்போது மேலும் பதட்டம் அதிகரிக்கிறது.  சுமார் 10 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மற்றொரு கோணத்தில் மாறுபட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது நடிகர் விஜய் சேதுபதி மீது பெங்களூர் விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெறவில்லை, விஜய் சேதுபதியின் நண்பர்மீதே அந்த தாக்குதல் நடந்துள்ளது. விஜய் சேதுபதியின் நண்பர் மகா காந்தி என்பவருக்கும், ஜான்சன் என்ற பயணிக்கும் விமானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது, அதன் தொடர்ச்சியாக விமான நிலைத்தில் வெளியே இந்த மோதல் சம்பவம் நடந்தது. 

இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகி விட்டனர். இது தொடர்பாக வேறு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என பெங்களூர் போலீசார் அதிரடியாக கூறியுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக விஜய்சேதுபதி தரப்பில் எந்த விதமான  விளக்கமோ, கருத்தோ இதுவரை தெரிவிக்கப்படவில்லை. உண்மையில் இந்த விஷயத்தில் என்னதான் நடந்தது என்ற குழப்பத்தில் தமிழக ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இதற்கு விரைவில் விஜய்சேதுபதி விளக்கம் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆனாலும் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவருக்கு அண்ணாமலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெங்களூரு விமான நிலையத்தில்  நடிகர் விஜய் சேதுபதி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது, மனிதாபிமானமற்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

click me!