தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 19ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை என பரபரப்பாகி உள்ளன.
ஏற்கனவே அதிமுக பாமக இடையேயான தொகுதி பங்கீடு முடிந்தது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் ஜி.கே. மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் கையெழுத்திட்டனர். எந்ததெந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும்.
இதனையத்து, அதிமுக - பாஜக இடையேயான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷண்ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இந்நிலையில், சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.