மருத்தகத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட சென்று கடைக்குள் சிக்கிய ஆசாமிகள்: நள்ளிரவில் களேபரம்

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2020, 10:55 AM IST
Highlights

தற்போது பணம் இல்லாததால் மாத்திரைகளையும், பணத்தையும் திருட வந்த போது ஷட்டர் மூடிக் கொண்டதால் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

மருத்தகத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட சென்ற திருடர்கள் உள்ளேயே சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.  சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம், பாரதி நகரில் சென்னை மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தமிம் அன்சாரி(28) இவரது கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட முயன்றுள்ளனர். அப்போது மாத்திரைகளை திருடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடையின் ஷட்டர் தானாக மூடிக் கொண்டது. உள்ளே இருந்து வெளியில் வர முடியாமல் தவித்த இரண்டு திருடர்களும் செய்வதறியாது திகைத்து கடைக்குள்ளேயே தவித்தனர். எவ்வளவு முயற்சித்தும் ஷட்டரை திருடர்களால் திறக்க முடியாமல் போனது. 

சத்தம் கேட்டு கட்டிடத்தின் உரிமையாளர் வெளியில் வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பகுதி மக்கள் உதவியோடு வெளியில் பூட்டை போட்டு திருடர்களுக்கு சிறை வைத்தனர். இது குறித்து மருந்தக உரிமையாளருக்கும், பல்லாவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து கடைக்குள் இருந்த திருடர்களை அமுக்கி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் திரிசூலத்தை சேர்ந்த வெங்கடேஷ்ராஜா(20), மற்றும் கார்த்திக்(19), இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் மருந்தகத்தில் அதிக பணம் கொடுத்து அவ்வப்போது போதைக்காக மருத்துவரின் பரிந்துரை ரசீது இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதாகவும், தற்போது பணம் இல்லாததால் மாத்திரைகளையும், பணத்தையும் திருட வந்த போது ஷட்டர் மூடிக் கொண்டதால் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பும் இந்த கடையில் இதே போன்ற திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது. அப்போதே போலீசார் கடையில் சிசிடிவி கேமரா பொருத்த சொல்லியும் சட்ட விரோதமாக மாத்திரைகளை விற்பதால் சிக்கிக் கொள்வோம் என்பதற்காக கடையின் உரிமையாளர் சிசிடிவி கேமரா பொருத்தவில்லை என்கின்றனர். இது குறித்து விளக்கம் கேட்க கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்ட போது அவர் மறுப்பு தெரிவித்தார். சிறிய கடை என்பதால் சிசிடிவி கேமராவை போலீசார் சொல்லியும்கூட பொருத்தவில்லை என்றார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் திருட்டு வழக்குப்பதிவு செய்து மாத்திரை திருடர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

click me!