புதுச்சேரியில் இளைஞர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் பாஜக - அதிமுக கூட்டணி..! காங்கிரஸை கலங்கடிக்கும் சர்வே

By karthikeyan VFirst Published Mar 16, 2021, 7:17 PM IST
Highlights

புதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இளைஞர்களின் பேராதரவை பெற்றிருப்பது ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் இணைந்து நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. 23-27 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றிவருகிறது பாஜக. 

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்ட நிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளது சர்வே.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் மார்ச் 5 முதல் 12 வரை 5077 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் கருத்து கேட்டது. அந்த கருத்து கணிப்பில், 52% பேர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36% பேர் மட்டுமே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், 23-27 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று சர்வே தெரிவிக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வெறும் 3-7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சர்வே தெரிவிக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் பேராதரவு பாஜக கூட்டணிக்கு இருப்பது தெரியவந்துள்ளது. வயது வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயில், 18-25 வயதினரில் 56% பேர் பாஜக - அதிமுக கூட்டணிக்கும், 37% பேர் மட்டுமே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வயது பிரிவினர் தான் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள். அவர்களின் ஆதரவு பாஜகவிற்கு அமோகமாக இருப்பதை சர்வே உணர்த்துகிறது.

அதேபோல, 26-35 வயதினரில் 48% பேர் பாஜக கூட்டணிக்கும், 38% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 36-50 வயதினரில் 51% பேர் பாஜக கூட்டணிக்கும், 33% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆதரவும் பாஜகவிற்கே உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில், 53% பேர் பாஜகவிற்கும், 34% பேர் காங்கிரஸுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சர்வேயின் மூலம் புதுச்சேரியில் இளைஞர்களின் பேராதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியே விட்டது. இந்த சர்வேயை கண்டு காங்கிரஸ் கலங்கித்தான் போயுள்ளது.
 

click me!