சவால் விடும் எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை...! இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்...! 

First Published May 14, 2018, 3:33 PM IST
Highlights
Arrest the S.Ve.Sekar - Otherwise struggle - K. Veeramani


பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த விழா ஒன்றில் எஸ்.வி சேகர் கலந்து கொண்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனையும் அவர் சந்தித்த வீடியோ வெளியானது. 

இந்த நிலையில், எஸ்.வி.சேகர் சென்னை மாநகர போலிஸுக்கு சவால் விடுத்து இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தான் எங்கும் ஓடிச்சென்று ஒளியவில்லை, துணிவிருந்தால் போலீசார் என்னைக் கைது செய்யட்டும் என்றும் அவர் சவால் விடுத்து உள்ளார். ஆனால் இதற்கு சென்னை போலீஸ் எந்த ஒரு பதிலையும் கூறாமல் மவுனம் காத்துவருகிறது.

இந்த நிலையில், எஸ்.வி.சேகரை காவல் துறை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.வி.சேகர் ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தைத் தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவர்மீது, அவதூறு பரப்பி அமைதியை சீர்குலைப்பது, எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக குற்றம் இழைக்கத் தூண்டுவது, சொல், செயல் மூலமாக பெண்களின் நடத்தையை இழிவுபடுத்துவது, தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவான அந்த நபர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு போட்டும், நீதிமன்றம் மனுவைத் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டதோடு, கடுமையாக நீதிபதி சாடியும் உள்ளார்.

இந்த சூழ்நிலையில் எஸ்.வி.சேகர், சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய
இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். இந்தச் செய்தி நேற்றே வெளிவந்துள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னையில்தான் இருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார் சென்னை பெருநகரக் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னை பெருநகரக் காவல்துறையும் அதன் சிறப்பான ஆணையரும்.

இத்தகு காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச்
செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே! இந்த நிலை தமிழக அரசுக்கும், சென்னை பெருநகரக் காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதாகாது. உடனே, சவால் விடும் எஸ்.வி.சேகரை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம் என்று வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!