பாண்டிச்சேரி மாதிரி தமிழ்நாட்டையும் ஆக்கப் போறீங்களா.? வேண்டாம் முதல்வரே.. கத்திக் கதறும் கமல்..

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2021, 2:37 PM IST
Highlights

கொரோனா தொற்றினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநிலம் தத்தளிக்கும் சூழலில், இந்த கௌரவப் பதவிகள் தேவையற்றவை  காலத்திற்கு ஒவ்வாத இந்த மேலவை எனும் அமைப்பை இந்தியாவின் பல மாநிலங்கள் ரத்து செய்துவிட்டன. 

காலத்திற்கு ஒவ்வாத சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமென திமுக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

பெரும் பணக்காரர்களும், ஜமீன்தார்களும், பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்ட கௌரவ அமைப்பே சட்ட மேலவையில் மூலவடிவம். விடுதலைக்குப்பின் ஜனநாயகம் மலர்ந்து, மக்கள் பிரதிநிதிகளில் சட்டமன்றம் உருவான பிறகு இந்த அவையின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. இன்று இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கிறது. ஒருகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, சொல்லின் செல்வர் மாபொசி, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று பல ஆளுமைகள் மேலவையில் இடம்பெற்றிருந்தனர். 

செறிவான பல விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் அரசியல் தலையீடுகளால் இந்த அவை தன்மானத்தை இழந்தது. கட்சிகள் தங்களுக்கு வேண்டியவர்களை திருப்தி செய்வதற்காக மேலவை பதவிகளை பயன்படுத்திக்  கொண்டன, திவால் நோட்டீஸ் கொடுத்த ஒருவரை மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததால், சர்ச்சை வெடித்தது. அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் மேலவையை கலைத்தார். திமுக ஆட்சிக்கு வரும் சமயத்தில் எல்லாம் மேலவையை கொண்டு வரும் முயற்சியில் தீர்மானங்களை நிறைவேற்றுவதும், அடுத்து வரும் அதிமுக அந்த முயற்சியை முறியடிப்பதும் தொடர் நிகழ்வு. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை சட்டமன்ற தொடரில் மீண்டும் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வர இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சட்டமன்றம் இருக்கிற தமிழக அரசுக்கு வழிகாட்ட பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன இந்நிலையில் சட்டமேலவை என்பது தேவையில்லாத ஒன்று. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம், ஊதியம் உள்ளிட்ட இதர வசதிகள் இந்த மேலவை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அமைச்சராகும் வாய்ப்பும் உருவாகும். புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை புகுத்தி ஜனநாயகத்தின் மாண்பை குலைத்தது போன்ற முயற்சிகளையும் தமிழகத்தில் எக்காலத்திலும் எந்த வடிவிலும் அனுமதிக்கக் கூடாது. ஒருபக்கம் முந்தைய அதிமுக அரசு கஜானாவை காலி செய்து வைத்திருப்பதால், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் காலாவதியாகிப் போன சட்ட மேலவையை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. கொரோனா தொற்றினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநிலம் தத்தளிக்கும் சூழலில், இந்த கௌரவப் பதவிகள் தேவையற்றவை. 

காலத்திற்கு ஒவ்வாத இந்த மேலவை எனும் அமைப்பை இந்தியாவின் பல மாநிலங்கள் ரத்து செய்துவிட்டன. மக்கள் வாழ்வில் எந்த ஏற்றத்தையும், மாற்றத்தையும் உருவாக்காத, அதே சமயத்தில் செலவீனம் பிடித்த இந்த அவையால், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் யாதொரு பயனும் இல்லை. தங்களுக்கு சட்டமன்றத்தில் இருக்கும் பலத்தை வைத்து திமுக சட்டமேலவை  என்னும் ஏற்பாட்டை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும், ஆனால் மாநிலம் இன்று இருக்கும் சூழலில் இது தேவையற்றது என்பதை ஆட்சியாளர்களுக்கு, மக்களுக்கும் சொல்ல வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. சட்டமேலவை மீண்டும் கொண்டுவரும் திட்டம் தமிழக அரசுக்கு இருக்குமானால் இன்றைய அரசியல் பொருளாதார சூழல்களை மனதில் கொண்டு இந்த முயற்சியை கைவிடும்படி, தமிழக முதல்வர் அவர்களை மக்கள் நீதி மையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

click me!