கொரோனா தொற்று மனிதர்களின் வாழ்வை சூறையாடி வரும் நிலையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தால், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்ஓ) மூலம் அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்.
கொரோனா வைரஸ் இந்தியாவை பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ உயிரிழந்துவருகிறார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்படும் மரணங்களால் அக்குடும்பத்தினர் நடுத்தெருவில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் உயிரிழந்தால், அக்குடும்பத்தினர் இபிஎஃப்ஓ மூலம் ரூ.7 லட்சம் வரை நிவாரணம் பெற முடியும் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் எனப் பலவும் தங்கள் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கு சிறிய தொகையை பிடித்தம் செய்துவருகிறார்கள். தொழிலாளர்களிடம் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறதோ, அதே அளவு தொகையை தங்கள் பங்காக தொழிலாளியின் பெயரில் நிறுவனமும் செலுத்தும். ஓய்வுக் காலத்துக்குப் பிறகு தொழிலாளிக்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்தத் திட்டத்தின் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பணிபுரியும் காலத்தில் இறந்தால், அந்தத் தொழிலாளியின் குடும்பத்துக்கு தொழிலாளர் வைப்புசார் காப்பீடு (இடிஎல்ஐ) என்ற திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இழப்பீடு தொகை அதிகபட்சமாக ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதன் மூலம், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளர்கள் இந்த இழப்பீட்டை பெற முடியும். கொரோனா தொற்று மட்டுமல்ல, வேறு எந்த காரணத்தால் தொழிலாளர் மரணமடைந்தாலும் இந்த இழப்பீட்டைப் பெறலாம்.
தொழிலாளர் பணிபுரிந்துவரும் காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாலோ அல்லது பணியின்போது திடீரென உயிரிழந்தாலோ இழப்பீடு கிடைக்கும். இந்த இழப்பீட்டை பெற வேண்டுமென்றால், ‘5IF’ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அந்தப் படிவத்தில் பணிபுரியும் நிறுவனத்தில் கையெழுத்து பெற வேண்டும். அந்தப் படிவத்தோடு, ரத்து செய்யப்பட்ட காசோலையை இணைக்க வேண்டும். அத்துடம் தொழிலாளரின் இறப்புச் சான்று, வாரிசு சான்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். இவை அனைத்தையும் சம்பந்தப்பட்ட இபிஎஃப்ஓ அலுவலகத்தில் சமர்பித்தால், இழப்பீடு பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 2.50 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 7 லட்சம் வரை பெற முடியும். அதாவது, தொழிலாளர் பெறும் ஊதியத்துக்கு ஏற்பவே இழப்பீடு கிடைக்கும். இத்திட்டத்தில் இழப்பீடு பெற பிஎஃப் சந்தாதாரர் நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். அதற்கும் குறைவாகப் பணிபுரிந்திருந்தால் எவ்வளவு இபிஎஃப் தொகை கணக்கில் செலுத்தப்பட்டதோ அந்த தொகைதான் கிடைக்கும்.