அட கடவுளே.. வாகன ஓட்டிகளுக்கு நோய் பரப்பும் சுங்கசாவடி..?? அலறும் பொதுமக்கள்..

By Ezhilarasan BabuFirst Published May 17, 2021, 9:36 AM IST
Highlights

சாத்தூரில் சுங்க கட்டண வசூல் மையத்தில் 6 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில ஆழ்ந்துள்ளனர். 

சாத்தூரில் சுங்க கட்டண வசூல் மையத்தில் 6 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில ஆழ்ந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எட்டூர் வட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 120க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் வடமாநிலத்தவர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த  இரு   தினங்களுக்கு முன்பு சுங்கக் சாவடி மையத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்த படந்தாலை சேர்ந்த விஜயன் என்பவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அங்கு வேலை செய்யும் உழியர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  

முதற்கட்டமாக வந்த மருத்துவ அறிக்கையில் ஐந்து பேருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு மருத்துவ அறிக்கை வராத நிலையில் பலருக்கு தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இங்கு பணிபுரியும் பல ஊழியர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஜலதோஷம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் நிர்வாகம் தங்களுக்கு விடுப்பு அளிக்க மறுக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் இந்த சுங்கக் சாவடி மையத்தின் வழியே அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவ்விடத்தில் கிருமி நாசினி தெளித்து இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கொரோனா உறுதி செய்யப்பட்டு ஊழியர் உயிரிழந்த நிலையில் பரிசோதனையில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் இந்த சுங்க சாவடி மையத்தில் இதுவரை எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மேலும் உடல்நிலை சரியில்லாத ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருவதால் மேலும் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர் இழப்பு ஏற்படுவதற்கும் வழிவகை செய்யும் என ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே சுங்க சாவடி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை நிர்வாகம் ஆகியவை உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா தொற்று பரவலை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள்   கோரிக்கை வைக்கின்றனர். 

click me!