அடிச்சார் பாரு ஆர்டரு... அண்ணாத்த அரசியல் பணால்... என்ன சொல்கிறார் ரஜினி..?

By Thiraviaraj RMFirst Published Jul 12, 2021, 11:59 AM IST
Highlights

 ரஜினிகாந்த், தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் மன்றம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
 

நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை காலையில் பேசிய ரஜினிகாந்த், உடல் நல பிரச்னைகள் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியதாகவும், கொரோனா கால சூழல்கள் காரணமாக பொதுவெளியில் அனைவரையும் சந்திப்பதை தவிர்த்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் நிர்வாகிகளுடன் பேசிய ரஜினிகாந்த், தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் மன்றம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

click me!