20 ஆயிரம் புத்தகங்கள் படித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்து மதத்தை ஆதரித்து அண்ணல் அம்பேத்கர் எழுதிய ஒரே ஒரு புத்தகத்தை காட்ட முடியுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சவால் விடுத்துள்ளது.
20 ஆயிரம் புத்தகங்கள் படித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்து மதத்தை ஆதரித்து அண்ணல் அம்பேத்கர் எழுதிய ஒரே ஒரு புத்தகத்தை காட்ட முடியுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சவால் விடுத்துள்ளது. மேலும் அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் என்ற புத்தகத்தையும் அண்ணாமலைக்கு அக்கட்சியனர் அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்த தினத்தன்று அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பாஜக- விடுதலை சிறுத்தைகள் இடையே மோதல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அம்பேத்கர் இந்து மதத்தை ஆதரித்தவர் என்று பாஜகவினரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அம்பேத்கர் குறித்து விவாதிக்க முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தயாரா என சவால் விடுத்த அண்ணாமலை, அவரை விவாதத்திற்கும் அழைத்திருந்தார். அதைத்தொடர்ந்து அக்காட்சியின் இளம் சிறுத்தைகள் இளைஞர் பாசறை மாநிலத் தலைவர் சங்கத்தமிழன் அண்ணாமலையுடன் விவாதிக்க தயார் என அண்ணாமலைக்கே தொலைபேசியில் அழைத்து கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
ஆனாலும் இது தொடர்பான பேச்சு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இந்து மதத்தை கடுமையாக விமர்சித்து அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் என்ற புத்தகத்தை அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அந்த அமைப்பு அண்ணாமலைக்கு ஒருக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம். எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி எதுவும் தெரியாது என்றும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்றும், தாங்கள் கூறியதுடன் இதுகுறித்து விவாதிக்க எங்கள் தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தது வேடிக்கையான ஒன்று.
தமிழகத்தில் மதவெறி அரசியலை தீவிரப்படுத்தி வரும் பாஜக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் இந்துத்துவ வாதியாக காட்ட முயற்சிப்பதையும் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கண்டிக்கின்றோம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை பற்றி தவறாக சித்தரித்து எழுதப்பட்டுள்ள இந்துத்துவ அம்பேத்கர் என்னும் புத்தகத்தை எங்கள் தலைவருக்கு தாங்கள் அனுப்பியுள்ளதை அறிந்தோம். தன் வாழ்நாள் முழுவதும் மூர்க்கமாக இந்துத்துவாவை எதிர்த்து போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இந்துத்துவ அம்பேத்கர் ஆக சித்தரிக்க முயற்சிப்பதே இமாலய தவறு ஆகும். அந்த நூலை எழுதியவர் தண்டிக்கப்பட வேண்டியவர் ஆவார். 20 ஆயிரம் புத்தகங்கள் வரை படித்துள்ள திரு அண்ணாமலை அவர்களே இந்து மதத்தை புகழ்ந்து புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய ஒரே ஒரு புத்தகம் இருந்தால் அனுப்புங்கள். அதுகுறித்து விவாதிக்க 24 மணி நேரமும் எங்கள் மாணவர் அமைப்பு தயாராக உள்ளது.
உங்கள் தலைவரின் ஒப்புதலோடு முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் reddles in Hinduism என்ற புத்தகத்தை உங்களுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கிறோம். இந்தப் புத்தகம் யாரோ மூன்றாம் நபர் எழுதிய புத்தகம் அல்ல, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகம். இதை தாங்கள் அவசியம் படிப்பீர்கள் என்று நம்புகிறோம், இது குறித்து என்னுடன் விவாதிக்க விரும்பினால் எங்கள் மாணவர் அமைப்பினர் விவாதிக்க தயாராக இருக்கிறோம். என்பதை இதன் வழியே தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைக்கு அம்பேத்கரின் எழுதிய புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.