
பாமகவின் பொதுக்குழுவை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் அன்புமணி. அதேவேளை வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார் ராமதாஸ். இருதரப்பிலும் தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல்.
கட்சியின் நிறுவனரான ராமதாஸ், கட்சியின் தலைவரும், தனது மகனுமான அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்ததோடு அவரை செயல் தலைவராக அறிவித்து, கூட்டணி தொடர்பான முடிவை நான் தான் எடுப்பேன் எனக் கூறினார். அதற்குப் பிறகு தற்போது வரை பாமகவில் பல்வேறு விவகாரங்கள் அரங்கேறி விட்டன.
இதற்கிடையே பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டை நடத்தினார் ராமதாஸ். பாமக பொதுக்குழுவில் ராமதாஸின் புகைப்படங்கள் இடம் பெற்றதோடு அவருக்கென தனி இருக்கை அமைக்கப்பட்டது. ஆனால், ராமதாஸ் நடத்திய மாநாட்டில் அன்புமணியின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. பதிலுக்கு ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் புகைப்படங்கள் இடம் பெற்றது. மேடையிலும் ஒரு தீர்மானத்தை வாசித்தார் ராமதாஸின் மகள் காந்திமதி. பாமக பொதுக்குழு கூட்டம் இப்படி இரு தரப்பும் மாநாடு பொதுக்குழு கூட்டம் என இருக்கும் நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என தவித்து கிடக்கிறார்கள் பாமக தொண்டர்கள்.
கடும் மன அழுத்தத்தில் இருந்தார் ராமதாஸ். ஆனால், மகளிர் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்த பிறகு அவரது கவலை எல்லாம் போய்விட்டன. ‘மகிழ்ச்சி கடலில் நீந்தினேன்’ என்கிறார் ராமதாஸ். அன்புமணி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பேச்சால் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார் ராமதாஸ். ‘நீங்கள் வேண்டுமானால் இங்கே வந்து உட்காரலாம். உங்களுக்கு இங்கே சேர் ரெடி. நான் எங்க அப்பாவை பற்றி சில உண்மைகள் பேசினால் பெரிய விவாதம் ஆகிவிடும். சிக்கலாகிவிடும்’’ என்று அன்புமணி பேசியதை ராமதாஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கடைசி கட்ட முயற்சியாக அவருடைய தாயார் சரவஸ்தி மூலமாக தூது விடுக்கப்பட்டது. ‘‘நான் மகளிர் மாநாடு நடத்திய பிறகாவது அன்புமணி இறங்கி வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் இன்னும் வந்து அன்புமணி செவிசாய்க்கவில்லை’’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ராமதாஸ். இந்நிலையில், அன்புமணியை சஸ்பெண்ட் செய்யும் முடிவில் இருக்கிறார் ராமதாஸ். எந்த நேரமும் இந்த அறிவிப்பு வரலாம். ஏனென்றால், இத்தனை நாட்களாக அன்புமணியை சுற்றி இருப்பவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார் ராமதாஸ் மகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் விமர்சித்து வந்தனர்.
‘‘மகனைச் சுற்றி இருப்பவர்கள் மீது நடவடிக்கை. ஆனால், மகன் மீது நடவடிக்கை இல்லை. இது என்ன லாஜிக்? என்று எல்லோரும் விமர்சித்தனர். சில பத்திரிகைகள் எல்லோர் மீதும் நடவடிக்க எடுக்கிற ராமதாஸ், ஏன் தன் மகன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்களா? என விமர்சித்தன. அதன் பிறகும் அமைதியாக இருந்தார் ராமதாஸ். மகளிர் மாநாடு நடத்திய பிறகு நடந்த சில பேச்சுவார்த்தைகள், சில ரகசியங்களை ராமதாஸால் ஜீரணிக்க முடியவில்லை.
ராமதாஸ் எடுக்கிற முடிவு இறுதி முடிவாக இருக்கும். இந்த தேர்தலில் எத்தனை முறை போட்டி என்பதல்ல. பாமக ராமதாஸ் பிரிவு, பாமக அன்புமணி பிரிவு என இருக்கப்போகிறதா? அல்லது இரண்டும் ஒன்றாக போகிறதா? என்பதுகூட தெரியவில்லை. ஆனால், அன்புமணி சஸ்பெண்ட் என அறிவித்த பிறகு அவரது தரப்பு ஆடிப் போகப் போகிற முடிவுகளை வெளியிடுவார் ராமதாஸ்’’ என்கின்றன தைலாபுரம் வட்டாரங்கள்.