அடேய் என் தமிழ் சொந்தங்களே..! புரிஞ்சுக்கோங்க.. மேட்டர் ரொம்ப சீரியஸ்..! கதறும் மருத்துவர் அன்புமணி..!

By Manikandan S R SFirst Published Mar 22, 2020, 2:52 PM IST
Highlights

அண்டை மாநிலங்களில் எல்லாம் அதிகளவில் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதாக கூறுவதை மருத்துவராக நான் மறுக்கிறேன். அரசிடம் முழு வெளிப்படை தன்மை வேண்டும். உண்மையாக பாதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் மக்களிடம் பீதியை கிளப்ப வேண்டாம் என நினைத்து அரசு எதையும் மறைக்க கூடாது. இப்போது இருக்குற சூழலில் மக்கள் பீதியடைய வேண்டும். அச்சப்பட வேண்டும்.

உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. 342 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் 6 பேர் பலியாகி இருக்கின்றனர். தமிழகத்திலும் தற்போது வரை 7 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாட்டில் 3 வார காலத்திற்கு முழு அடைப்பை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனமான பாலிமர் தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியவை:

கொரோனா வைரஸ் குறித்து தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. உலகநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா குறித்து இருக்கும் விழிப்புணர்வு எதுவும் தமிழகத்தில் இல்லை. குறிப்பாக சென்னையில் மக்கள் ஒன்றும் நடக்காதது போல கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா வைரஸ் மற்ற சாதாரண வைரஸ்களை போன்று கிடையாது. இது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அது போதுமானதாக இல்லை. தமிழகத்தில் கொரோனா குறித்து விழுப்புணர்வு ஏற்படாததற்கு காரணம் இங்கு பாதிப்பு குறைவாக இருப்பதாக வரும் செய்திகளே ஆகும். இந்தநிலையில் பிரதமர் தேசம் முழுவதும் சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துகிறார். அதற்கு மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

"

நாம் இப்போது முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். மருத்துவராக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக பிற நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பார்த்து 3 வார ஊரடங்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுகிறேன். மக்கள் இன்னும் கூட்டமாக தான் செல்கிறார்கள். குறுகிய காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினம். எனவே உடனடியாக முழு அடைப்பை தொடர உத்தர விட வேண்டும். உலக நாடுகள் நடுங்குகின்ற நேரத்தில் நாம் இப்போது தான் தேர்வுகளையே ஒத்தி வைத்துள்ளோம். பொதுமக்கள் யாருக்கேனும் பாதிப்பு இருந்தால் உங்களை நீங்களே தனிமை படுத்திக்கொள்ளுங்கள். அரசு கூறும் நடவடிக்கைகளை கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் பரவாமல் நம்மால் தடுக்க இயலும். கொரோனா நோய்க்கு தடுப்பு பூசி கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகலாம். அவை இப்போது தான் பரிசோதனையில் இருக்கின்றன. அதன்காரணமாகவே நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களில் எல்லாம் அதிகளவில் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதாக கூறுவதை மருத்துவராக நான் மறுக்கிறேன். அரசிடம் முழு வெளிப்படை தன்மை வேண்டும். உண்மையாக பாதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் மக்களிடம் பீதியை கிளப்ப வேண்டாம் என நினைத்து அரசு எதையும் மறைக்க கூடாது. இப்போது இருக்குற சூழலில் மக்கள் பீதியடைய வேண்டும். அச்சப்பட வேண்டும். எனவே அரசு உடனடியாக பின் வரும் நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பாதிப்பை குறைக்கலாம். இல்லையெனில் சீனா,இத்தாலியை விட மோசமான நிலையை இந்தியா சந்திக்கும். நம்மிடம் போதுமான மருத்துவ வசதிகள் கிடையாது. அதன்காரணமாகவே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். துடித்து கொண்டிருக்கிறேன். இனியும் தாமதிக்காமல் அரசு முழு அடைப்பை அடுத்து வரும் வாரங்களுக்கு சாத்தியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர் தொலைக்காட்சி

click me!