அன்பில் மகேஷ் ‘பற்ற’ வைத்த அமைச்சர் உதயநிதி வெடி… கிச்சன் காபினெட்டின் ‘கிறுகிறு’ அரசியல்.....

By manimegalai aFirst Published Dec 3, 2021, 8:11 AM IST
Highlights

2022ம் ஆண்டு ஜூன் மாதம் உதயநிதியை அமைச்சராக்கும் வகையில் இப்போது இருந்தே அமைச்சர் உதயநிதி முழக்கத்தை கையில் எடுத்துள்ளார் அன்பில் மகேஷ் என்று பேச்சுகள் திமுகவில் எழுந்துள்ளது.

2022ம் ஆண்டு ஜூன் மாதம் உதயநிதியை அமைச்சராக்கும் வகையில் இப்போது இருந்தே அமைச்சர் உதயநிதி முழக்கத்தை கையில் எடுத்துள்ளார் அன்பில் மகேஷ் என்று பேச்சுகள் திமுகவில் எழுந்துள்ளது.

அரசியல் ரீதியாக திமுக மீது இன்றும் எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல். அதற்கு பல கட்டங்களில் திமுக தரப்பில் பதில்கள், பதிவுகள் தரப்பட்டாலும் இன்னமும் அந்த குற்றச்சாட்டு மாறவில்லை.

அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக ஒரு விஷயம் அரசியல் களத்தில் முன் வைக்கப்படுகிறது. அதுதான் அமைச்சர் உதயநிதி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொளுத்திவிட்ட வெடி.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே உதயநிதிக்கு தொகுதி ஒதுக்கும் போதோ கட்சி சீனியர்களிடம் ஒரு வித அதிருப்தி குரல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் தொகுதி ஒதுக்கப்பட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி வென்றார். இப்போது மழை வெள்ள பாதிப்பு கால கட்டத்தில் மக்களை நேரடியாக சந்தித்து நிவாரணங்களையும், மற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

எம்எல்ஏ ஆனவுடன் அடுத்து அமைச்சர் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து அதை அப்போதே ஸ்டாலின் மறுத்துவிட்டார் என்று ஒரு பேச்சு இருந்தது. அதன் காரணமாக தான் உதயநிதி பெயர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால், இப்போது காலத்தின் கட்டாயம், மக்கள் விருப்பம், உதயநிதிக்கு அமைச்சராக தகுதி இருக்கிறது பேச்சுகள் மெல்ல எட்டி பார்க்க ஆரம்பித்துள்ளன. அதன் முதல் திரியைதான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்ற வைத்துள்ளார் என்கின்றனர் அறிவாலயத்தை நன்கு அறிந்தவர்கள்.

இது குறித்து பல்வேறு தகவல்களை விவரம் அறிந்த அரசியல் பிரமுகர்கள் முன் வைக்கின்றனர். அவர்கள் கூறுவது இதுதான்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு சாதாரணமாக பேசப்படும் ஒரு விஷயம் அல்ல. அதில் உள்ள சூட்சும அரசியல் என்பது வேறு.

அடுத்த 6 மாதத்தில் அமைச்சரவையில் உதயநிதியை இடம்பெற வைக்க வேண்டும் என்பது தான் எண்ணம். 2022ம் ஆண்டு ஜூன் மாதம்(அதாவது திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு கழித்து) அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவார்.

அதற்கான ஆரம்ப கட்ட செயல்பாடுகள் அல்லது முன்னோட்டம் தான் இது. திமுகவில் மட்டும் தான் இப்படி என்றில்லை. அதிமுகவிலும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், இதோ போன்றதொரு பார்முலா பின்பற்றப்பட்டு சசிகலா முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன் பிறகு தான் பொது செயலாளராகவும், பின்னர் முதலமைச்சர் பதவியை நோக்கியும் சசிகலா அடியெடுத்து வைத்தார். ஆனால், அரசியல் கால சூழலில் அவரின் நிலைமை இப்போது மாறிவிட்டது. அப்படி ஒரு அஜெண்டாவுடன் தான் அன்பில் மகேஷ் இப்போது வாய் திறந்து அமைச்சர் உதயநிதி என்ற முழக்கத்தை பேசி இருக்கிறார். இது படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு தானாகவே நகர்த்தப்படும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்தை கடைபிடிக்க விரும்பினாலும், திமுகவின் கிச்சன் காபினெட் அரசியல் வேகமாகவே இருக்கிறது என்கின்றனர் சகலமும் அறிந்தவர்கள். அதனால் தான் அன்பில் மகேஷ் பேச வைக்கப்பட்டு இருக்கிறார்.

இனி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்… அமைச்சர் உதயநிதி என்ற பேச்சுகள் மெதுவாகவும், பின்னர் வேகம் எடுக்கும் என்றும் 2022ம் ஆண்டு ஜூன் திமுக பதவியேற்று ஓராண்டு கழித்து நிச்சயமாக உதயநிதி அமைச்சராக அமர்வார் என்று போட்டு தாக்கின்றனர் திமுகவை நன்கறிந்தவர்கள்….!!

click me!