சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 40 சீட்கள் வரை தேமுதிக கேட்ட நிலையில் தற்போது பாமக, பாஜக கட்சிகளுக்கு இணையாக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவை சந்தித்து பேசினார். அப்போது பாமகவிற்கு நிகராக தங்களுக்கு 23 தொகுதிகளாவது வேண்டும் என்று தேமுதிக தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் கொடுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கறாராக கூறிவிட்டார். இதனால், இதனை ஏற்கும் நிலையில் தேமுதிக வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தேமுதிக தரப்பில் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. 13 தொகுதிகளும் நாங்கள் விரும்பும் தொகுதிகளாக இருக்க வேண்டும். அதாவது பாமக விரும்பிய தொகுதிகளாக இருந்தாலும் தாங்கள் கேட்டால் விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனிடையே, நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு அதிமுக - தேமுதிக உடனான தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்புள்ளது.