பிழைப்பேனா? மாட்டேனா இருந்தேன்.. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.. அதிமுக எம்எல்ஏ உருக்கம்..!

Published : Aug 26, 2021, 12:03 PM IST
பிழைப்பேனா? மாட்டேனா இருந்தேன்.. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.. அதிமுக எம்எல்ஏ உருக்கம்..!

சுருக்கம்

16வது சட்டமன்றத்தில் நான் உறுப்பினராக இங்கே வந்திருப்பதை அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். காரணம், கடந்த ஜனவரி 19ம் தேதி எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 16 நாட்கள் கவலைக்கிடமான நிலையில், பிழைப்பேனா? மாட்டேனா என்ற நிலையில் இருந்தேன். 

16வது சட்டமன்றத்தில் நான் உறுப்பினராக இங்கே வந்திருப்பதை அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டுறவு துறை மற்றும் உணவுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய நன்னிலம் தொகுதி உறுப்பினர் காமராஜ்;- 2021 மே மாதம் நடந்த டெண்டர் ஒன்றில் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதில் கடந்த அதிமுக ஆட்சி சம்பந்தப்பட்டிருப்பதாக உணவு துறை அமைச்சர் குற்றம்சாட்டினார். பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை, உடனடியாக ஏலம் விட்டுவிட முடியாது. ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கமிட்டி உள்ளது. போர்டு உள்ளது. அந்த போர்டில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். அந்த போர்டு கூடி மார்க்கெட் விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக கொடுக்க முடியாது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருந்தால் விசாரியுங்கள். தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி: பருப்பு விலை ரூ.120க்கு அன்றைக்கு டெண்டரில் குறிப்பிட்டிருந்தனர். இன்று திமுக ஆட்சியில் ரூ.76க்கு வாங்கியதால் அரசுக்கு ரூ.75 கோடி லாபம். அதேபோன்று பாமாயிலில் ரூ.5 கோடி லாபம் கிடைத்துள்ளது. அரசுக்கு ரூ.80 கோடி லாபம் கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சியில், டெண்டரில் கலந்து கொண்டவர்கள் வெறும் 3 பேர்தான். இன்று டெண்டர் எளிமையாக்கப்பட்டு 20 பேர் டெண்டரில் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரத்தில் ரூ.100 கோடிக்கு குடோன் கட்டியுள்ளனர். கஜா புயலின் போது குடோன் பக்கத்தில் ஒரு செடி கூட ஆடவில்லை. வேறெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த குடோன் மட்டும் சேதமடைந்துள்ளது. அதற்கு ரூ.60 கோடி செலவழித்திருக்கிறீர்கள். ராணிப்பேட்டையில் நடந்த நெல் கொள்முதல் நிலையத்தில் என்னென்ன தவறு நடந்ததெல்லாம் குறித்து இன்று சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளோம். எனவே இந்த துறையில் கடந்த காலத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முன்னதாக சட்டபேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் பேசுகையில்;- 16வது சட்டமன்றத்தில் நான் உறுப்பினராக இங்கே வந்திருப்பதை அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். காரணம், கடந்த ஜனவரி 19ம் தேதி எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 16 நாட்கள் கவலைக்கிடமான நிலையில், பிழைப்பேனா? மாட்டேனா என்ற நிலையில் இருந்தேன். 

நான் நலம்பெற அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும், நான் பிழைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.  எனக்காக பிரார்த்தனை செய்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று உருக்கமாக பேசினார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!