எதிர்கட்சிகளை முடக்கிவைத்து விட்டு பரப்புரைகளில் அதிமுக தீவிரம்?? தலையில் அடித்துக் கதறும் முத்தரசன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2020, 11:11 AM IST
Highlights

அரசு நிகழ்ச்சிகள் மூலம் ஆளும் கட்சி அரசியல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்க் கட்சிகளின் கூட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பது சட்ட மீறலாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசு நிகழ்ச்சிகள் மூலம் ஆளும் கட்சி அரசியல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்க் கட்சிகளின் கூட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பது சட்ட மீறலாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும்  தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து இயக்க வேண்டும் என்றும் ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்கவேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாட்டில், தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.  

ஊரடங்கு நடைமுறைகள் தொடங்கி 150 நாட்கள் கடந்த நிலையில், தொழிற்சாலைகளில் 100 சதவீத தொழிலாளர்கள் பணிபுரியலாம், அரசு அலுவலகங்களும் 100% பணியாளர்களோடு இயங்கும், காட்சி அரங்குகள், உள்ளிட்ட வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் முழு அளவில் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்தை  மீண்டும் அனுமதிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுத்ததை அரசு கருத்தில் கொள்ளவில்லை, மெட்ரோ ரயில் இயக்கவும், மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்குவதும்  பொதுமக்களின் நேரத்தை வீணடித்து பணச் செலவை அதிகரிக்கும் செய்யலாகும். தமிழ்நாடு முழுவதற்குமான பொதுப்போக்குவரத்து இயக்குவது மிக மிக அவசியமாகும். 

ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில் குற்றவியல் சட்டம் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பது கேலிக் கூத்தாகும். அதேபோல் அரசு  நிகழ்ச்சிகளின் மூலம் ஆளும் கட்சி அரசியல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்க் கட்சிகளின் கூட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பது சட்ட அத்துமீறலாகும். கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசியல் ஆதாயம் தேடும் அதிமுக அரசின் ஜனநாயக விரோத செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் பொது போக்குவரத்தை அனுமதித்து, சட்டபூர்வ ஜனநாயக இயக்கங்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!