பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா?பாயிண்டை பிடித்த நீதிபதி! இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் வழக்கு

By vinoth kumarFirst Published Aug 11, 2022, 6:33 AM IST
Highlights

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும். மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, விதிகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். 

நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு, மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி நடத்தப்பட்டதா, இல்லையா என்பது குறித்து மட்டும் வாதிட வேண்டும். பொதுக்குழுவின்போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றார். 

இதையும் படிங்க;- இபிஎஸ் சுற்றுப் பயணம்- ஓபிஎஸ் களத்துக்கே வரல, அதுக்குள்ள இப்படியா ? வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

 பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், உரிய விதிகளை பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டது. 1.5 கோடி தொண்டர்களின் விருப்பத்தை 2600 பேர் செல்லாததாக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்தார். இரு பதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டலாம் என விதி உள்ளது. தேர்தல் விதிதிருத்தத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிடில் இரு பதவிகளும் காலியாகிவிடும். ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும். மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, விதிகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடுகையில்;- கட்சி நிறுவனம் ஒன்றும் நிறுவனமோ, சொசைட்டியோ அல்ல. கட்சி விதிப்படி பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் கொண்டது. தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டியது தவறில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறினால், இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொருளாளர் தலைமை கழக நிர்வாகிகள் கட்சியை நிர்வகிக்க வழி வகை செய்கின்றன என்றார். அப்போது நீதிபதி, பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா? நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு, மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சசிகலா இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை குறிப்பிட்ட விஜய் நாராயண். சசிகலா சிறை சென்றதால் அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் தான் பொதுக்குழுவை கூட்டினார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்றார். அதற்கு நீதிபதி, பொதுக்குழு ஒப்புதல் பெறாததால் 2 பதவிகளும் காலாவதி என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்கான தேர்தலும் செல்லாதா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க;- அதிமுக அலுவலக சாவி விவகாரம்.. இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!

 

மேலும், தமிழ் மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டாரா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். கடந்த ஜூன் 23-ம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து கையெழுத்திட்டதன் அடிப்படையில் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு  ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், தமிழ்மகன் உசேன் முன்மொழியும் நேரத்தில் வெளிநடப்பு செய்ததாகவும், வழி மொழியவில்லை . இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறினார்.

பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிகளின்படிதான் நடந்தது என்றால் அதை விளக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதி தெரிவித்தார். பின்னர் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்;- பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2 அல்லது 3 மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம் செல்லும் எனக்கூறினார். இதனையடுத்து, நீதிபதி இந்த வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு தொடரும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க;-  அதிமுக துண்டு துண்டா உடைஞ்சதுக்கு திமுக தான் காரணம்.. பாஜக இல்லை.. மனம் திறந்து பேசிய சசிகலா.

click me!