
அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன்(65) உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் (65). காட்பாடி திருநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருடைய உடல் திருநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவரது மறைக்கு அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூரில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 2-வது வேட்பாளர் செங்குட்டுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
2001-ல் இருந்து 2006 வரை வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 வரை பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தார். 1980-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தனது மாணவர் நாட்களில் அதிமுக உறுப்பினராக இருந்தார். அதிமுக இரண்டாக உடைந்தபோது அமமுகவில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.