தேர்தலில் சசிகலா அதிமுகவுக்கு சாதகமாக செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தேர்தலுக்கு முன்னர் தான் அரசியலிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். எனினும், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டால் சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற அரசியலில் களமிறங்குவார் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அது தற்போது, நிஜமாகி விட்டது.
அதிமுகவை ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் கையிலிருந்து மீட்டெடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் சசிகலா முடுக்கி விட்டிருப்பதாக தெரிகிறது. அவ்வப்போது, அதிமுக பிரமுகர்களிடம் “கட்சியை சரி பண்ணிடலாம்… சீக்கிரமா வருகிறேன்”என்றெல்லாம் தான் பேசுவது போல ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினர் உடன் சசிகலா பேசவில்லை. அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார் என்று கூறினார்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அதிமுகவுக்கு சாதகமாக செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சசிகலா விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து எடுப்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 10 நாட்களிலேயே அரசை விமர்சிப்பது எதிர்கட்சிக்கு சரியல்ல’என்றும் அவர் கூறியுள்ளார்.