தமிழகம் முழுவதும் புராதன கோவில்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்.. அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 11:30 AM IST
Highlights

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும், கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்,  

தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது. கோவில் நிலங்கள் அக்கிரமிப்பு, புராதன கோவில்களை பாதுகாப்பு தொடர்பாக வழக்குவிசாரணையில் சென்னை உயர்நீதி மன்றம் இவ்வாறு கூறியுள்ளது. 

மேலும், நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும், அதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும், கோவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்,  நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட  வேண்டும்,  ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும். 

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும், கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும், மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும்,  இவ்வாறு புராதன கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் 75 உத்தரவுகளை சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 

click me!