2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

By Raghupati RFirst Published Nov 2, 2022, 7:29 PM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் நல்ல பெய்து வருகிறது. 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த முதல்வர், மழை நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

முதல்வர் ஸ்டாலின்:

அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் மழை நிலவரம் குறித்தும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், நீர் தேக்கங்களின் நிலைமை குறித்தும் முதல்வருக்கு எடுத்துக் கூறினார்.பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், வட சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை சீரழித்து விட்டார்கள். அதை சரி செய்ய நிறைய வருடம் ஆகும். ஆனால் நாங்கள் ஓன்றரை ஆண்டில் முடித்து விடுவோம் என்ற நம்பிகை உள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க..கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை

எடப்பாடி பழனிசாமி:

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், ‘விடியா அரசின் முதலமைச்சர் அவர்களின் இன்றைய பேட்டியில், அம்மாவின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை, ஓராண்டில் நிறைவேற்றிவிட்டதாக மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே வாடிக்கையாகக் கொண்ட இந்த ஆட்சியாளர்கள், அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் திட்டமிடப்பட்டு நடைபெற்று வந்த பணிகளில் ஒருசிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு "ஊரில் கல்யாணம், மாரில் சந்தனம்" என்ற வகையில் நெஞ்சை நிமிர்த்தி செல்வது கேலிக்குரியதாகும்.

'5 ஆண்டுகள் சென்னை மேயராகவும், 5 ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின் அவர்கள், சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம் செய்தார். அவர் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் தமிழ் நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை உருவாக்கி, வெள்ளம் தேங்காத நிலையை ஏற்படுத்தியிருந்தால் எங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நாங்கள் எதுவும் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

சென்னை மழை:

'ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகராட்சி மேயராக 5 ஆண்டுகளும், உள்ளாட்சித் துறை அமைச்சராக 5 ஆண்டுகளும் இருந்தபோது ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. இதனால்தான். அம்மாவின் அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ் நாடு முழுமைக்கும் எங்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டப் பணிகளை மக்கள் நன்கறிவார்கள்.

இதையும் படிங்க..குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!

'எனது தலைமையிலான ஆட்சியில், 4 ஆண்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 196 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2015-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020-ஆம் ஆண்டில் 3-ஆக குறைக்கப்பட்டது. சென்னையில் 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு அரசு:

இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளித்ததற்கான காரணம் வெள்ள நீர் கால்வாயில் இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பணியை தொடராமலும், திட்டமிட்டு முழுமையாக முடிக்காததாலும், வெள்ள நீர் போக முடியாமல் நிறைய இடங்களில் தேங்கியுள்ளது. இன்னும் பெருமளவில் பருவ மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

"2 நாள் மழைக்கே இற்றுப் போன தமிழகம், வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் மக்கள்!"

கையாலாகாத விடியா திமுக அரசுக்கு மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. அவர்கள் கடும் கண்டனம். pic.twitter.com/PIu7H8kwq8

— AIADMK (@AIADMKOfficial)

இனியும், இந்த ஏமாற்று அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..தத்தளிக்கும் சென்னை!! கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் விடுத்த கோரிக்கை

click me!