தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பதன் காரணமாக பேருந்து. மின்சாரம் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்த இருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிதி பற்றாக்குறையால் திணறும் தமிழக அரசு
தமிழகத்தில் நிதிபற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடனாக 6.53 லட்சம் கோடி உள்ளது இந்தநிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசிற்கு நிதி தேவைப்படும் நிலை உள்ளது. இந்தநிலையில் திமுக அரசு பதவியேற்ற ஒரு வருட காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு முத்திரை கட்டணம், டாஸ்மாக் கட்டணம் போன்றவற்றை தமிழக அரசு விலை உயர்த்தி உள்ளது. இந்தநிலையில் போக்குவரத்ததுறை மிகுந்த நஷ்டத்தில் இயங்கும் நிலை உள்ளது. குறிப்பாக டீசல் விலை உயர்வு, பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம், பேருந்து பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் செலவு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு பேருந்து மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் மின் மற்றும் பேருந்து கட்டண உயர்வு
இந்தநிலையில் சேலத்தில் அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில், இலவச தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை பற்றியோ, மக்கள் பிரச்சினைகள் பற்றியோ கவலைப்படாத அரசு திமுக அரசு. தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி வருவதாக தெரிவித்தார். கொரோனா பரவலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள சூழலில் சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாது என கூறியவர், நிதி ஆதாரத்தை திரட்ட திமுக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயர உள்ளதாக கூறினார்.