"மேற்கு வங்கத்தில் நேற்று நடந்தது.. நாளை தமிழகத்தில் நடக்கும்.." ஸ்டாலினை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி !!

By Raghupati RFirst Published Feb 13, 2022, 1:03 PM IST
Highlights

‘மேற்கு வங்காளத்தை போல் தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்க நேரிடும்’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘தேர்தல் பணிகளை அதிகாரிகள், போலீசார் நேர்மையாக செய்ய வேண்டும். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு பயந்து அதிகாரிகள் செயல்பட கூடாது. இந்த தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். 

அதற்கான நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம். தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும். அப்படி நேர்மையாக தேர்தலை நடத்தாவிட்டால் நாங்கள் நடத்த வைப்போம். பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தனது வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பை செய்யவில்லை. சம்பிரதாயத்திற்கு வெறும் 3 ரூபாயை மட்டும் பெட்ரோலுக்கு குறைத்து உள்ளனர். 

திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. அதிமுகவை எதிர்கொள்ளும் திராணி திமுகவிற்கு இல்லை. இப்போது இருக்கும் திமுகவிற்கு அந்த பலம் இல்லை. தேர்தலை அறிவித்து விட்டோம். நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்பது தானே முதல்-அமைச்சருக்கு அழகு. நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அப்படித்தானே செய்தேன். நாங்கள் எதிர்கட்சியினரை, மக்களை அப்படித்தானே சந்தித்தோம். அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இல்லையே. 

அந்த தெம்பு இல்லாமல்தான் முறைகேடு சம்பங்களில் ஈடுபட திமுகவினர் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேற்கு வங்காளத்தில் என்ன ஆனது என்று பார்க்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் கவர்னர் அங்கு சட்டசபையையே முடக்கி உள்ளார். அதே தமிழ்நாட்டிலும் இதேபோல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் கவர்னர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்திலும் நிலவும். திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி’ என்று பேசினார்.

click me!