
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்புள்ள குக்கர்களை டிடிவி தினகரன் வழங்கி இருப்பதாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் புகார் தெரிவித்துள்ளார். தினகரன் மீதும் துணைபோன குக்கர் நிறுவனம் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்வதோடு தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மதுசூதனன் வலியுறுத்தி உள்ளார்.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
ஆனால் அதிமுகவை சேர்ந்த மதுசூதனனும் டிடிவியும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே திமுக இரு தரப்பின் மீதும் புகார்களை அள்ளி வீசுகிறது.
சில தினங்களுக்கு முன்பு ராயபுரத்தில் புதிதாக் திறக்கப்பட்ட குக்கர் கடையில் கூட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்புள்ள குக்கர்களை டிடிவி தினகரன் வழங்கி இருப்பதாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் புகார் தெரிவித்துள்ளார். தினகரன் மீதும் துணைபோன குக்கர் நிறுவனம் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்வதோடு தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மதுசூதனன் வலியுறுத்தி உள்ளார்.