
பல்வேறு வகையில் மோசடியில் ஈடுபட்டு ஆளுங்கட்சி ஆர்.கே.நகரில் வெற்றியை களவாட காத்துக்கொண்டிருப்பதாகவும் கண்ணயராமல் களப்பணியாற்றி திமுக வேட்பாளரை வெற்றியடைய செய்ய வேண்டும் எனவும் அக்கட்சியினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
ஜெயலலிதா இல்லாத நிலையில் முதன் முதலாக ஆர்.கே.நகரில் நடைபெறும் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு முதல்வரும் துணை முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே துரோகம் செய்த எடப்பாடிக்கும் பன்னீருக்கும் பாடம் கற்பிக்க எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என முனைப்போடு ராவும் பகலும் வாக்கு சேகரித்து வருகிறார் டிடிவி.
கடந்த ஆர்.கே.நகரில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டோம். இந்த முறை ஸ்டாலின் ஆளுமையை நிரூபித்தே ஆக என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு வகையில் மோசடியில் ஈடுபட்டு ஆளுங்கட்சி ஆர்.கே.நகரில் வெற்றியை களவாட காத்துக்கொண்டிருப்பதாகவும் கண்ணயராமல் களப்பணியாற்றி திமுக வேட்பாளரை வெற்றியடைய செய்ய வேண்டும் எனவும் அக்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு அடையாளமாக இடைத்தேர்தல் அமையட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக முயற்சியால் 45,000 போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகவும் அரசு இயந்திரத்தின் மூலம் மோசடி செய்ய காத்துக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.