
உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என்றும், 15 ஆண்டுகளுக்கு பின் பாரதிய ஜனதா ஆட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
403 தொகுதிகள்
உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது.
மும்முனைப் பேட்டி
இந்த தேர்தலில் சாமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாரதிய ஜனதா கட்சி தனியாகவும், மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ்கட்சி தனியாகவும் களம் இறங்கியதால், மும்முனைப் போட்டி நிலவியது.
தீவிர பிரசாரம்
உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரதமர் மோடி சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு கொஞ்சம் சளைக்காமல் முதல்வர் அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் வாக்குச் சேகரித்தனர்.
குடும்ப சண்டை
ஆனால், சமாஜ்வாதி கட்சிக்குள் கடைசி நேரத்தில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம், முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கும் இடையிலான சண்டை மக்கள் மத்தியில் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தாமரை மலர்கிறது
அதேசமயம், சூறாவளிப்பயணம் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு கைமேல் பலன் கிடைக்க உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனத் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
என்.டி.டி.வி.
என்.டி.டி.வி நடத்திய கருத்துக்கணிப்பில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 179 இடங்களையும் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரியவந்துள்ளது. சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 136 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களையும், மற்ற கட்சிகள் 11 இடங்களையும் பிடிக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே
இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 185 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களிலும்,பகுஜன் சமாஜ் கட்சி 90 இடங்களிலும் வெற்றி ெபறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நியூஸ்
இந்தியா நியூஸ் நடத்தி கள ஆய்வில், பாரதிய ஜனதா கட்சி 185 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும் என்றும், ஆளும் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 60 முதல் 72 இடங்களில் வெற்றி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொங்கு சட்டசபை
ஏ.பி.பி. நடத்திய தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி 164 முதல் 176 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 156 முதல் 169 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 60 முதல் 72 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆய்வில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையலாம் எனத் தெரியவந்துள்ளது.
டைம்ஸ் நவ்
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய ஆய்வில், பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. அந்த கட்சி 185 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் சமாஜ் வாதி கூட்டணி 120 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 90 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது.