உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட்ட அரக்கோணம் எம்எல்ஏ ரவி வாக்கு சாவடி மையத்தில் நடுவிரலை உயர்த்தி காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை: உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட்ட அரக்கோணம் எம்எல்ஏ ரவி வாக்கு சாவடி மையத்தில் நடுவிரலை உயர்த்தி காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நேற்று 2ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி உள்பட 3 ஒன்றியங்களில் வாக்குகள் பதிவாகின.
நெமிலி ஒன்றியத்தில் தமது கிராமத்தில் அதிமுகவின் அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ ரவி தனது ஓட்டை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு அந்த மையத்தில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு அவர் கொடுத்த போஸ் தான் இப்போது வம்பை விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கமாக ஓட்டு போட்டவர்கள் அதற்கு அடையாளமான தமது ஆட்காட்டி விரலை காட்டுவார்கள். ஆனால் அரக்கோணம் ரவி நடுவிரலை உயர்த்தி காட்டி இருக்கிறார். இந்த செய்கை தான் இப்போது சர்ச்சையாக மாறி இருக்கிறது.
வாக்களித்தவர்கள் எப்போதும் ஆட்காட்டி விரலைத்தான் காட்டுவார்கள். காரணம்… அந்த விரலில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள ஊழியர் அழியா மை ஒன்றை வாக்களித்தார் என்பதை அடையாளப்படுத்த வைப்பார். ஆனால் எம்எல்ஏ ரவி நடுவிரலை உயர்த்தி ஆபாச செய்கையை எதற்கு காட்டினார் என்று தெரியவில்லை.
நடுவிரலை உயர்த்தி அவர் செய்த இந்த செய்கை அங்கிருக்கும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியை அடைய வைத்தது. அவர் சொல்லும் இந்த நடுவிரல் மெசேஜ் யாருக்கு…? எதிர்க்கட்சிக்கா? தமது எதிர்ப்பாளர்களுக்கா? என புரியாமல் சொந்த கட்சியினரே குழப்பத்தில் இருக்கின்றனர். என்ன இருந்தாலும் ஒரு எம்எல்ஏ, பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதி இப்படிப்பட்ட ஆபாச செய்கையை செய்திருக்க கூடாது என்று கண்டங்களும் பலமாக எழுந்துள்ளன.