தேர்தலுக்குப் பிறகு அடுத்தடுத்து அதிமுக வேட்பாளர்கள் பலரும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அக்கட்சி தொண்டர்களையும், தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழகம் முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதிலும் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய சில நாட்களிலேயே அடுத்தடுத்து வேட்பாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக, அதிமுக, திமுக என எவ்வித பாகுபாடும் இன்றி வேட்பாளர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் தேர்தலுக்குப் பிறகு அடுத்தடுத்து அதிமுக வேட்பாளர்கள் பலரும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அக்கட்சி தொண்டர்களையும், தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.