பிரச்சார வாகனத்தை ஓட்டிய படியே வாக்கு சேகரிப்பு... தாராபுரத்தை தெறிக்கவிட்ட நடிகை கெளதமி!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 28, 2021, 7:14 PM IST
Highlights

அப்போது தாராபுரம் தேசிய ஜனநாயகக் கூட்டணி பணிமனையில் இருந்து பிரசார வாகனத்தை 10 கிலோ மீட்டர் தூரம் தானே ஓட்டி வந்தார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. கடும் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஐடியாக்களுடன் வேட்பாளர்கள் களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

​சுயேட்சை வேட்பாளர்கள் முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வரை காய்கறி விற்பது, பாட்டு பாடுவது, நாற்று நடுவது, தோசை சுடுவது, மீன் பொறிப்பது என வாக்கு சேகரிக்க பகுதிகளில் தினுசு, தினுசான டெக்னிக்குகளை முயற்சித்து வருகின்றனர். அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளில் அவர்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல். முருகனை ஆதரித்து பிரபல  நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தாராபுரம் அதிமுக மேற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த வாகன பிரச்சாரத்தில் அலங்கியம் காவல் நிலையம் அருகேபாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தாராபுரம் தேசிய ஜனநாயகக் கூட்டணி பணிமனையில் இருந்து பிரசார வாகனத்தை 10 கிலோ மீட்டர் தூரம் தானே ஓட்டி வந்தார். அலங்கியம் வந்த  நடிகை கௌதமியை அதிமுக,பாஜக,பாமக கூட்டணி கட்சியினர் உற்சாகமாக பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.


அங்கு திறந்த வேனில் நின்றவாறு   பேசிய நடிகை கெளதமி, ‘இரட்டைஇலை தான் இன்று தாமரையாக மலர்ந்துள்ளது ஆதலால் வாக்காளர்கள் நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து எல். முருகனை வெற்றியடைய செய்ய வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி தொடர வேண்டுமென்றால் பெண்களை மதிக்க வேண்டும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பெண்களையும் பெண்ணின் உரிமைகளையும் கொச்சைப்படுத்தி இழிவு படுத்தி பேசி வருகிறார்.  திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை கொச்சையான வார்த்தைகளால் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அதை என் நாவால் சொல்ல முடியாது, ஆதலால் அவர்களை புறக்கணித்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

click me!