சினிமா மூலம் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்து விட்ட நடிகர்கள் கோலோச்சிய தமிழ்நாடு என்பதால் அந்த ஆசையில் நடிகர் விஜயும் தனது திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசி வருகிறார். அவருடைய சில படங்கள் அரசியல் சர்ச்சைகளில் சிக்கியதும், அதன் காரணத்தால் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதில் கூட சிக்கலை சந்தித்து திக்கித் திணறியதும் இந்த மெர்சல் வரை நீடித்தது.
மெர்சல் படத்திலும் அரசியல் வசனங்கள் தலை தூக்குகின்றன. இந்த முறை விஜய் டார்கெட், தமிழன் உணர்வு, மத்திய அரசு, ஜிஎஸ்டி, ‘ரமணா’ பாணி மருத்துவ கொள்ளைகள்... இவைதான்! இதனால், மீண்டும் தமிழக தலைமைச் செயலகத்துக்குள் நுழையும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் விஜய். அதற்கு ஏற்ப, சென்னை ராயபுரம் ஐடீரிம் திரையரங்கத்தை ஒரு மாடல் ஆக்கியுள்ளனர். .
சென்னை ஐ ட்ரீம் தியேட்டரில் நேற்று மெர்சல் படம் திரையிடப்பட்டது. இந்த திரையங்கத்தில், சட்டமன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வளைவுகள் போன்று கட்அவுட்கள் வைக்கப் பட்டிருந்தன.
இது படத்தைப் பார்க்க வந்த ரசிகர்களின் புருவத்தை உயர்த்தியது. பலர் வெளிப்படையாகவே, தளபதிக்கு கோட்டை மேல் ஒரு கண் என்று கூறியதைக் கேட்க முடிந்தது.
படத்தைக் காண வந்த ரசிகர்கள், இதைப் பார்த்துவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்கள் மக்களை எப்படி வழிநடத்துவார்கள் என்பதுதான் முக்கியம். அரசியலுக்கு வருவதும் வராததும் அவரவர் விருப்பம் என்றனர் ரசிகர்கள்.
மெர்சலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிலை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் என ... வசனங்களில் ஒரு குத்து குத்துகிறார் விஜய். இதனால் இந்தப் படம் வெளியாவதில் தடைகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
கோட்டைக்கு ஆசைப்பட்டாலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து, படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விளக்கி அதன்பின்னரே தடைகள் நீங்கி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.