
தமிழகம் நிதி நிலைமை நெருக்கடியில் இருந்த நிலையில் பதவியேற்ற ஸ்டாலின் முதன்முதலாக கையெழுத்திட்ட 5 கோப்புகளும் மிகுந்த வரவேற்பை பெற்றன. தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்குமென அறிவிக்கப்பட்டு, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மே மாதத்திலும், 2-வது தவணை ஜூன் மாதத்திலும் வழங்கப்பட்டது. இதற்காக 4 ஆயிரத்து 153 கோடி செலவிடப்பட்டது. அதேபோல தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்தத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, தேசிய அளவில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது. இத்திட்டத்தினால் கல்வி, சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்தது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கப்பட்டது. என பல்வேறு சாதனைகளை ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததையொட்டி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். கோவையில் திமுக ஒராண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தின் வசனமான "என்ன பயமா இருக்கா! 2024 இன்னும் பயங்கரமா இருக்கும்" என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஒரு மாதத்துக்கு முன்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், `ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளாகச் சொன்ன 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றைச் செய்துவிட்டோம்’ என சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.ஒராண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும் திமுகவினர் செய்து வருகின்றனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.