Actor Surya : பதறிப்போன சூர்யா.! கையெழுத்துடன் வெளியான போலி கடிதம்.. ஜெய்பீம் விளையாட்டு இன்னுமா முடியல.?

By Asianet TamilFirst Published Jan 8, 2022, 10:07 PM IST
Highlights

“சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.

இட ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக நடிகர் சூர்யா பெயரில் வெளியான அறிக்கை போலியானது என்று சூர்யாவின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஓபிசிக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், அந்தத் தீர்ப்புக்கு தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்ற ரீதியில் சில கட்சிகளும் அறிக்கை வெளியிட்டன. குறிப்பாக திமுகவினரும் பாமகவினரும் தங்கள் தலைமைக்குக் கிடைத்த வெற்றி என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா பெயரிலும் அறிக்கை ஒன்று வெளியாகி, சமூக ஊடகங்களில் சுற்றியது. அதில், ‘இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்கள் நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்து கொள்கிறேன்.

4 ஆயிரம் மருத்துவக் கல்வி இடங்கள், இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கிடைக்க இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்தப்பதிவுச் சுட்டெண் (Gross Enrolement Ratio) தேசிய மற்றும் மாநில சராசரிகளை விட அதிகம். எனவே, இந்தத் தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800-க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்பது எனது நம்பிக்கை. சமூக நீதிப்பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடைபோடட்டும். என்றும் நாமும் உடன் நிற்போம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் நடிகர் சூர்யாவின் கையெழுத்தும் இருந்தது.

A fake letter in the name of dated 08-01-2022 is being circulated in social media, kindly ignore. Necessary legal action is being taken.

— Rajsekar Pandian (@rajsekarpandian)

இந்த அறிக்கையை திமுகவினர் அதிகளவில் பகிர்ந்தனர். இந்நிலையில், இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்தில், இது சூர்யா பெயரில் வெளியான போலி அறிக்கை என்று சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் பின்னணியில் ஜெய்பீம் படம் விவகாரம் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இட ஒதுக்கீடு தீர்ப்பு விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு சூர்யா பாராட்டு தெரிவிப்பதைப் போல தோற்றம் ஏற்படுவதன் மூலம், அதுதொடர்பாக சட்டப் போராட்டம் நடத்திய பாமக உள்ளிட்ட இதர கட்சியினருக்கு கோபம் உண்டாகலாம். அது சூர்யாவுக்கு எதிராகத் திரும்பலாம் என்று யாராவது திட்டமிட்டிருக்கலாம். 

ஏற்கெனவே ஜெய்பீம் படம் விவகாரத்தில் சூர்யாவுக்கும் - பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  அந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சிகளின் அடிப்படையில் அன்புமணி 9 கேள்விகள் கேட்டு எழுதிய கடிதத்துக்கு, நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதினார். ஆனால், அந்தப் பதில் திமிர்த்தனமாக இருந்தது உஎன்று பாட்டாளிகள் கொந்தளித்தனர். அதனைத் தொடர்ந்தே ‘சூர்யாவை எட்டி உதைத்தால் லட்சம் ரூபாய் பரிசு’, ‘சூர்யா வெளியே நடமாட முடியாது’ எனும் எச்சரிக்கை, சூர்யா படம் ஓடிய தியேட்டர் முற்றுகை, வன்னியர் சங்கம் சார்பில் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் என எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதுபோல, அரசியல் ரீதியாக சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியானால், அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இந்த சில்மிஷ விளையாட்டில் யாராவது ஈடுபடிருக்கக்கூடும் என்றே தெரிகிறது. 

click me!