41 ஆண்டுகால வேதனை.. இன்னக்கிதான் நிறைவேறி இருக்கு.. டிவிட்டரில் மகிழ்ச்சியை கொட்டி தீர்த்த ராமதாஸ்..

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 10:35 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், எதிர்வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், எதிர்வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். கடுமையான சவாலுக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. லீக் சுற்றில் அபாரமாக ஆடி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதியில் பிரிட்டனை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் அதிக அனுபவம் வாய்ந்த பெல்ஜியம் அணியிடம் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா. 

இந்நிலையில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டு ஆடியது. இதில் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் அபாரமாக ஆடின. அனல் தெறித்த இந்த போட்டியில் இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்று இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை  கைப்பற்றியுள்ளது. இதற்கு பாரதப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு: 

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. ஹாக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்! ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஆனால், 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு  41 ஆண்டுகளாக ஹாக்கியில் நம்மால் பதக்கம் வெல்ல முடியாதது வேதனையாகவே இருந்து வந்தது. இன்றைய வெற்றியின் மூலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறியிருக்கிறது! 2024 பாரிஸ் ஒலிம்பிக்  ஹாக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழகம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும்!

click me!